நில ஆக்கிரமிப்பு: ஸ்டாலினுக்கு எதிரான தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் டிஸ்மிஸ்
டெல்லி: முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு தொடர்ந்த நில அபகரிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் சேஷாத்திரி என்பவரது வீட்டை குறைந்த விலைக்கு வாங்கி அதை அபகரித்துக் கொண்டதாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவர் மீதும் நில அபகரிப்பு வழக்கு கடந்த 2012ம் ஆண்டு தொடரப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஸ்டாலின் குடும்பத்தாருக்கும், சேஷாத்திரிக்கும் சமரசம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு முடித்து வைக்கப்படடது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த இருநபர் பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்டதாக கூறிய நபரே வழக்கை வாபஸ் பெற்றபிறகும், அரசியல் உள்நோக்கத்துடன், தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதாக ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.