சிறையிலிருந்தபடி ஹோட்டலை விற்கும் சுப்ரதா ராய்.. மேலும் 15 நாள் அவகாசம் கொடுத்த சுப்ரீம் கோர்ட்

ஜாமீன் கிடைக்காமல் திஹார் சிறையில் அடைபட்டுள்ளார் ராய். ஜாமீன் வேண்டுமானால் ரூ. 10,000 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டது. இதனால்அந்தப் பணத்தைத் திரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார் ராய்.
இதற்காக நியூயார்க் மற்றும் லண்டனில் உள்ள தனது மூன்று சொகுசு ஹோட்டல்களை அவர் விற்கவுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக திஹார் சிறைக்குள்ளேயே அவருக்கு அலுவலகம் அமைத்துத் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அலுவலகம் ஒதுக்கப்பட்டது.
தொலைபேசி, இணையதளம், வீடியோ கான்பரன்சிங் வசதியுடன் கூடியதாக இந்த அலுவலகம் உள்ளது. இங்கிருந்தபடி ஹோட்டலை வாங்க வருவோரிடம் பேசி வருகிறார் சுப்ரதா ராய். இந்த நிலையில் தற்போது இதுதொடர்பான ஒப்பந்தங்கள் இறுதியாகி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார் சுப்ரதா ராயின் வழக்கறிஞர்.
இதுகுறித்து அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், லண்டன் கிரஸ்வெனோர் ஹவுஸ் ஹோட்டலை விலை பேசியுள்ளோம். இது பேங்க் ஆப் சீனா நிர்ணயித்திருந்த விலையை விட 46 சதவீதம் அதிகமாகும்.
மேலும் ஒரு வெளிநாட்டு வங்கி தனக்கு ரூ. 5000 கோடி உத்தரவாதத் தொகையைத் தர முன்வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் லண்டன் ஹோட்டலை வாங்குவது யார், உத்தரவாதம் தரும் வெளிநாட்டு வங்கி எது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
அத்துடன் தனக்கு மேலும் 15 நாள் அவகாசம் தேவை என்றும் ராய் கோரியிருந்தார். அதை ஏற்ற கோர்ட் அவருக்கு 15 நாள் கூடுதல் அவகாசம் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications