சபரிமலை செல்லும் பிந்து அம்மினி, ரெஹானா பாத்திமாவுக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: சபரிமலைக்கு செல்லும் சமூக ஆர்வலர்களான பிந்து அம்மினி மற்றும் ரெஹானா பாத்திமாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்திருந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பெஞ்ச், 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதேநேரத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற முந்தைய உத்தரவுக்கு தடை ஏதும் விதிக்கவில்லை. இதனால் சபரிமலை செல்வதற்கு இந்த ஆண்டும் பெண்கள் முயன்றனர். ஆனால் கேரளா அரசு அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது.
இதனை எதிர்த்து சமூக ஆர்வலர்களான பிந்து அம்மினி, ரெஹானா பாத்திமா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே கூறியதாவது:
சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது உண்மைதான். அதேநேரத்தில் இந்த விவகாரத்தை விரிவான அரசியல் பெஞ்சுக்கும் உச்சநீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டுள்ளது.
விரிவான அரசியல் சாசன பெஞ்ச் விரைவில் அமைக்கப்பட்டு மறு ஆய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெறும். சபரிமலை செல்ல பிந்து அம்மினி, ரெஹானா பாத்திமாவுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
சபரிமலையில் வன்முறை நிகழ்வதை உச்சநீதிமன்றம் விரும்பவில்லை. இவ்வாறு தலைமை நீதிபதி பாப்டே கருத்து தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications