ஹாதியா திருமணத்தில் தலையிடாமல் விசாரணை நடத்தலாம்... என்ஐஏவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
ஹாதியாவின் கலப்பு திருமணத்தில் தலையிடாமல் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடரலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : ஹாதியா கலப்பு திருமண வழக்கு விவகாரத்தில் அவருடைய திருமணம் பற்றிய கேள்விகள் எழுப்பாமல் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த அகிலா என்கிற ஹாதியா தன்னுடைய கணவர் ஷஃபீன் ஜஹானை தீவிரவாதியாக சித்தரிக்க தன்னை வற்புறுத்துவதாக கூறி இருந்த குற்றச்சாட்டுகளை தேசிய புலனாய்வு அமைப்பு மறுத்துள்ளது. ஹாதியாவிடம் சட்டத்திற்குட்பட்டே விசாரணை நடத்தப்பட்டதாகவும், அவர் குற்றவாளியா அல்லது தீவிரவாதியா என்பது தொடர்பான கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டதாகவும் என்ஐஏ கூறியுள்ளது.

ஆதாரங்கள் மற்றும் சேகரித்த தகவல்களின் அடிப்படையிலேயே ஹாதியாவிடம் வெளிப்படையான விசாரணை நடைபெற்றதாகவும், ஹாதியா தங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்றும் என்ஐஏ சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளது. ஷஃபீன் ஜஹான் தீவிரவாதி போல சித்தரிக்கப்படுவதாக ஹாதியா கூறுவதிலும் உண்மையில்லை.
என்ஐஏ சுப்ரீம் கோர்ட் கொடுத்த உத்தரவுகளின் அடிப்படையிலேயே விசாரணை நடத்தி வருகிறது, நாங்கள் கேட்ட கேள்விகளைத் தான் அறிக்கையிலும் தாக்கல் செய்துள்ளோம் என்றும் என்ஐஏ விளக்கம் அளித்தது. மேலும் ஏறத்தாழ கலப்புதிருமணம் செல்லுமா என்று தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிந்து விட்டதாகவும் இது தொடர்பாக 2 பேரிடம் மட்டுமே விசாரணை மிஞ்சியுள்ளதாகவும் கூறியுள்ளது.
கலப்புத் திருமண வழக்கில் முக்கிய சாட்சிகளாக கருதப்படும் பசல் முஸ்தபா மற்றும் ஷிரின் ஷஹந்த் இருவரிடம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டியுள்ளது. ஆனால் இவர்கள் இரண்டு பேருமே வழக்கின் விசாரணை தொடங்கும் முன்னரே யேமன் சென்றுவிட்டனர். அவர்கள் நாடு திரும்பும் போது விசாரணைக்கு ஆஜராகும்படி லுக் அவுட் நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் என்ஐஏ கூறியுள்ளது.
மதம் மாறி ஹாதியா ஜஹானை திருமணம் செய்தது செல்லாது என்று கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஜஹான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். உச்சநீதிமன்ற உத்தரவுபடி இவர்களின் கலப்பு திருமணம் பற்றி என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. ஹாதியா ஜஹான் திருமணம் குறித்து எந்த விசாரணையும் மேற்கொள்ளக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே நிபந்தனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications