சபரிமலை கோயிலில் பெண்களை ஏன் அனுமதிக்க கூடாது? சுப்ரீம்கோர்ட் அதிரடியால் ஆட்டம் காணும் பழமைவாதம்!!
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை ஏன் அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளால் பழமைவாதிகள் அதிர்ந்து போயுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பு மற்றும் 5 பெண் வழக்கறிஞர்கள் சபரிமலை கோயிலுக்குள் வயது கட்டுப்பாடு இன்றி பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று 2006-ம் ஆண்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கு இதுதான்...
அதில், 10 வயதில் இருந்து 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் செல்வது அபச்சாரமான காரியம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. கேரளா உயர்நீதிமன்றம் கூட 1991-ல் கோயில் நிர்வாகத்தின் இந்த தடையை அனுமதித்து உத்தரவு பிறப்பித்தது. 1987-ல் கன்னட நடிகை ஜெயமாலா கோயிலுக்குள் நுழைந்து விக்கிரகத்தை தொட்டதாக சர்ச்சை எழுந்த போது அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிகள் நடைபெற்றன. அத்துடன் இதற்கு பரிகாரமாக விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. பெண்கள் மீதான இத் தடைக்கும் இந்து மதத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இத்தடைகள்தான் இந்து மதத்துக்கு முற்றிலும் எதிரானதாகும். ஒருவரை கர்ப்பக்கிரகத்தில் நுழையத்தான் தடை விதிக்கலாமே தவிர பாலின அடிப்படையில் கோயிலுக்குள் நுழையவே தடை விதிக்க முடியாது. ஆகையால் கேரளாவின் தடை அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இத்தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இம்மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, பினாகி சந்திரகோஷ், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. சபரிமலை கோயில் நிர்வாகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், கேரளா அரசு சார்பில் வழக்கறிஞர் லிஸ் மாத்யூ ஆகியோர் ஆஜராகினர்.
கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வேணுகோபால், 41 நாட்கள் விரதம் இருந்து மலையின் உச்சியில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலுக்கு செல்ல வேண்டும். மாதவிலக்கு நிற்காத பெண்கள் அத்தனை கடுமையான விரதம் இருந்து கோயிலுக்கு செல்லமுடியாத நிலையில் இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுகளாக இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்றார்.

நீதிபதிகள் அதிரடி
இதற்கு நீதிபதிகள் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு:
- சில நூற்றாண்டுகளாகத்தான் ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக வாதிடப்படுகிறது. அப்படியானால் கடந்த 1,500 ஆண்டுகளாக எந்த பெண்ணும் இந்த கோயிலுக்குள் போகவே இல்லை என்பதற்கான ஆதாரம் இருக்கிறதா?
- கோயிலுக்கு பெண்கள் போவது என்பது ஒரு தனிப்பட்ட உரிமை. ஆனால் பெண்கள் கோயிலுக்கு போக விரும்புவதை எந்த அடிப்படையில் தடுக்க முடியும்?
- வயது, பாலினம், ஜாதி அடிப்படையில் பாகுபடுத்துவது என்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது.
- அரசியல் சட்டத்தின் அடிப்படையில் பெண்கள் கோயிலுக்குள் செல்வதை தடுக்கும் அதிகாரம் இருந்தால் மட்டுமே அவர்களை செல்லக்கூடாது எனக் கூறமுடியும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இந்த வழக்கின் விசாரணை மீண்டும் வரும் 18-ந் தேதி நடைபெற உள்ளது.

அன்று மாதவிடாய் விவகாரம்
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இந்த கருத்து பெரும் பரபரப்பையும் வாதப் பிரதிவாதங்களையும் உருவாக்கி உள்ளது. அண்மையில் கூட திருவாங்கூர் தேவஸ்தானத்தின் தலைவர் பிராயர் கோபாலகிருஷ்ணன், மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் தீட்டா? இல்லையா என்பதை கண்டறிய சோதனை இயந்திரம் ஒன்று தேவை என கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சமூக வலைதளங்களில் ஹேப்பி டு பிளீட் என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு பெண்கள், மாணவிகள் சேனிட்டரி நாப்கினுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதற்கு ஆண்களும் கூட ஆதரவு தெரிவித்திருந்தனர்.

ஏன் போகக் கூடாது?
தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை ஏன் அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டிருப்பது பழைமைவாதிகளை அலற வைத்துள்ளது. சமூக முற்போக்காளர்களை கொண்டாட வைத்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த கேரளாவின் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. சுதாகரன், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை கட்டாயம் அனுமதிக்க வேண்டும். ஆண்கள் எங்கெல்லாம் செல்ல முடியுமோ அங்கெல்லாம் பெண்களும் செல்ல முடியும் என்கிறார்.
ஆனால் சபரிமலை கோயில் தந்திரி கண்டரேரு ராஜிவேரு, பெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் பார்வை...பழமைவாதங்களுக்கு வேட்டு வைக்குமா?












Click it and Unblock the Notifications