ஜெ.வை விடுதலை செய்த கர்நாடகா ஹைகோர்ட் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்: சுப்ரீம்கோர்ட்டில் தவே வாதம்
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு புரிபடாத, முரண்பாடான ஒன்று; இயற்கை நீதியின் அடிப்படையில் அந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே இன்றும் வாதிட்டார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
இதனை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் உள்ளிட்டோர் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கை ஒத்திவைக்கக் கோரிய ஜெயலலிதாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக கர்நாடகா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே இறுதிவாதத்தைத் தொடங்கினார். இந்த இறுதிவாதத்தில், ஒரு ரூபாய் ஊதியம் பெற்ற ஜெயலலிதா எப்படி சொத்துகளை வாங்கிக் குவிக்க எங்கிருந்து பணம் வந்தது? ஜெயலலிதா உள்ளிட்டோரின் சதிச் செயல்களை விசாரணை நீதிமன்றம் நிரூபித்திருந்தபோதும் கர்நாடகா உயர்நீதிமன்றம் அதை பொருட்படுத்தாமல் மேம்போக்காக விசாரித்தது. அத்துடன் ஜெயலலிதாவின் சொத்துகளை மதிப்பீடு செய்ததில் வெளிப்படையாகவே பிழைகள் இருக்கின்றன. ஆகையால் ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு சிறை தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றத்தை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது. இன்றும் தமது இறுதிவாதத்தைத் தொடர்ந்த துஷ்யந்த் தவே கூறியதாவது:
கர்நாடகா உயர்நீதிமன்றமானது ஜெயலலிதாவின் சொத்துகளை மதிப்பீடு செய்ததில் ஏற்பட்ட கணக்குப் பிழையால்தான் அவர் விடுதலையாக நேரிட்டது.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் ஜெ. சொத்து மதிப்பு ரூ2.82 கோடி; இது ஒட்டுமொத்த வருவாயில் 8.12% அதிகம். ஆகையால் இதற்காக தண்டிக்கத் தேவையில்லை என கூறி ஜெயலலிதாவை விடுதலை செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. (10%க்கும் குறைவான சொத்துகளை குவித்ததால் ஒருவர் விடுதலை செய்யப்பட்ட பழைய தீர்ப்பை சுட்டிக்காட்டி ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார்)
ஆனால் அதே கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மற்றொரு பகுதியில் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ16.32 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் ஒட்டுமொத்த வருவாயில் இது 76.7% அதிகமாக உள்ளது.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு புரிபடாத, முரண்பாடான ஒன்றாகும். இயற்கை நீதியின் அடிப்படையில் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு தவே வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்றைய விசாரணை முடிவடைந்தது. நாளை 3-வது மற்றும் இறுதி நாளாகவும் தவே தமது வாதங்களை முன்வைக்க உள்ளார்.
இதன் பின்னர் அன்பழகன் தரப்பு, தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வாதங்களை முன்வைக்கும்.












Click it and Unblock the Notifications