டெல்லி நீதிமன்ற பாதுகாப்பு குறித்து ஆராய வக்கீல்கள் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்!
டெல்லி: டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் அங்குள்ள பாதுகாப்பு குறித்த ஏற்பாடுகளை ஆராய உச்சநீதிமன்றம் மூத்த வழக்கறிஞர்கள் 6 பேரைக் கொண்ட குழுவை நியமித்துள்ளது. அக்குழுவும் பாட்டியாலா நீதிமன்றத்துக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர்.
தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஜே.என்.யூ. பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் மீதான வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு விசாரணை குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் திங்களன்று கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இன்றும் ஒரு பத்திரிகையாளர் தாக்கப்பட்டார்.

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள் முறையீடு செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி செலமேஷ்வர், பாட்டியாலா நீதிமன்ற பாதுகாப்பு குறித்து ஆராய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தலைமையிலான ஒரு குழுவை அனுப்பி வைத்தார். இதனடிப்படையில் அக்குழுவினர் பாட்டியாலா நீதிமன்றத்துக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.
மேலும் டெல்லி காவல்துறை ஆணையர் பஸ்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நீதிபதி செலமேஷ்வர், பாட்டியாலா நீதிமன்ற பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணையின் இறுதியில், பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் கன்னையாகுமார் வழக்கு விசாரணையை அவசியம் ஒத்திவைக்க வேண்டும்; வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதி செலமேஷ்வர் கூறினார்.












Click it and Unblock the Notifications