உச்சநீதிமன்ற தீர்ப்பு டெல்லிக்கு மட்டுமல்ல புதுச்சேரிக்கும் பொருந்தும்.. கிரண்பேடி தலையில் பேரிடி
துணை நிலை ஆளுநருக்கு தன்னிச்சையாக செயல்பட அதிகாரமில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: துணை நிலை ஆளுநருக்கு தன்னிச்சையாக செயல்பட அதிகாரமில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் அதன் துணை நிலை ஆளுநருக்கும் இடையில் பெரிய அளவில் பிரச்சனை நிலவி வந்தது. துணை நிலை ஆளுநரின் அறையிலேயே முதல்வரும் அமைச்சர்களும் போராடும் நிலை கூட ஏற்பட்டது.
முதல்வரின் வரம்பில் துணை ஆளுநர் ஈடுபட்ட பல நடவடிக்கை எடுத்தது பிரச்சனை ஆனது. இதனால் உண்மையான அதிகாரம் யாருக்கு இருக்கிறது என விளக்கம் கேட்டு ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது. அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்யப்பட்டது.
அதன்படி டெல்லியில் அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளது. துணை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை. அவர்களால் தன்னிச்சையாக செயல்படமுடியாது என்றுள்ளது. டெல்லியில் எப்படி பிரச்சனை நிலவியது அதே போல்தான், புதுச்சேரியிலும் பிரச்சனை நிலவி வருகிறது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், துணை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையில் அதிகாரப் பகிர்வில் பிரச்சனை இருந்து வருகிறது.
துணை ஆளுநர் கிரண் பேடி புதுச்சேரியில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்கிறார், அதேபோல் மாநில முதல்வர் உருவாக்கும் விதிமுறைகளுக்கு எதிராக சில விதிமுறைகளை அறிமுகப்படுத்துகிறார். சமயங்களில் இருவரும் நேரடியாக அறிக்கை விட்டு தாக்கிக் கொள்வதும் நடக்கிறது.
இந்த நிலையில் டெல்லி விவகாரத்தில் நீதிமன்றம் சொல்லி இருக்கும் கருத்து, புதுச்சேரிக்கு பொருந்தும். இதனால் முன்பு போல கிரண்பேடியால் முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக செயல்பட முடியாது. இது கிரண்பேடிக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும். அதேபோல் மற்ற மாநிலங்களில் ஆளுநர் செய்யும் ஆய்வுகளுக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் .