பதன்கோட் அருகே ஆயுதங்களுடன் 2 பேர் நடமாடுவதாக தகவல்.. தீவிரவாதிகளா என சந்தேகம்
பதன்கோட்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் இந்திய விமானப்படைத் தளம் மீதான பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலே இன்னும் முடிவடையாத நிலையில் அதற்கு அருகே ஒரு கிராமத்தில் ஆயுதங்களுடன் 2 பேர் நடமாடுவதாக வந்த தகவலால் பரபரப்பு கூடியுள்ளது.
பதன்கோட் விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளில் ஐந்து பேர் கொல்லப்பட்டு விட்டனர். ஒருவன் மட்டுமே உயிருடன் உள்ளே சிக்கியுள்ளான். அவனைப் பிடிக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றது.
இந்த நிலையில் பதன்கோட் அருகே ஒரு கிராமத்தில் 2 பேரை ஆயுதங்களுடன் பார்த்ததாக போலீஸாருக்குத் தகவல் வந்துள்ளது. பதன்கோட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மன்வால் என்ற கிராமம். அங்கு ஆயுதங்களுடன் இரண்டு பேரை இன்று காலையில் பார்த்ததாக கிராமவாசி ஒருவர் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அந்த இருவரும் ஒரு காரைப் பறித்துச் சென்றதாகவும் தகவல் வந்தது. ஆனால் அது வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது. இருப்பினும் ஆயுததாரிகள் யாரேனும் அப்பகுதியில் உள்ளனரா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.