காஷ்மீர்: கலவரத்திற்கு பின் அமைதி.. 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது
காஷ்மீரில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படாத வண்ணம் பள்ளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக குறிப்பாக புர்கர் வாணி சுட்டு கொலை செய்யப்பட்டதில் இருந்து அமைதி இல்லாமல் காணப்படுகிறது. அங்கு தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும், பெல்லட் குண்டு தாக்குதலால் பலருக்கு பார்வை இழப்பும் ஏற்பட்டது. கலவரம் நடைபெற்ற போது, 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் எரிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று ஜம்மு-காஷ்மீரில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. இதில் ஒரு லட்சத்து 500 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். 45 ஆயிரம் 12ம் வகுப்பு மாணவர்கள் 484 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதும் மாணவர்கள் முறையான அடையாள அட்டை பெற்ற பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
இங்கு நாளை 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. இதில் 55 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
கடந்த ஜுலை 9ம் தேதியில் இருந்து கலவரம் நடைபெற்று வருவதால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை முழுமையாக நடத்த முடியவில்லை. இந்த காரணத்தால் தற்போது தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களுடைய பாடத்தில் இருந்து 50 சதவீதம் மட்டுமே தேர்விற்கான பகுதியாக இருக்கும் என்று அம்மாநில கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தேர்வு எழுதும் பள்ளிக் கூடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காஷ்மீர் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நஜீம் அக்தர் பிரிவினைவாதிகளால் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications