பாதுகாப்புக்கு ஆபத்து: ‘வாட்ஸ் ஆப்’புக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
டெல்லி: நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தாக மாறியுள்ள வாட்ஸ் ஆப் செயலியை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இன்று பேஸ்புக், ட்விட்டரை விட முன்னணியில் உள்ள சமூக வலைத் தளம் வாட்ஸ் ஆப். ஒரு ஸ்மார்ட் போனும் இணையதள தொடர்பும் இருந்தாலும் போதும்.

வாட்ஸ் ஆப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனும் அளவுக்கு பரவலான பயன்பாட்டில் உள்ளது இந்த செயலி.
இந்த வாட்ஸ் ஆப் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என சுதீர் யாதவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில், "பேஸ்புக்', ‘டுவிட்டர்' போன்ற சமூக வலை தளங்களைப் போன்று வாட்ஸ் ஆப்பும் பலதரப்பட்ட மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலியில் (ஆப்ஸ்) பல்வேறு மாற்றங்களை கடந்த ஏப்ரல் 5-ந்தேதி முதல் வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன்மூலம் வாட்ஸ் அப் வழியாக அனுப்பப்படும் தகவல்களை அனுப்புவோரும், பெறுவோரும் மட்டுமே பார்க்க, படிக்க முடியும். இரு பயனாளிகளுக்கு இடையே பரிமாறப்படும் தகவல்களை வாட்ஸ் ஆப் நிறுவனமோ மற்ற யாருமோ பெறவோ, படிக்கவோ முடியாது.
இதனால் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் அரசு உளவு நிறுவனங்களால் வாட்ஸ் ஆப் வழியாக செய்யப்படும் அழைப்புகள், வீடியோ, படங்கள் மற்றும் ஆவணங்களை தேச பாதுகாப்பு தொடர்பான விசாரணைகளுக்காக கண்டுபிடிக்க முடியாது.
மேலும் சூப்பர் கம்ப்யூட்டர்கள் எனப்படும் அதிநவீன கணினிகளாலும் கூட இந்த உரையாடல்களையோ, ஆவணங்களையோ இடைமறித்து கண்டுபிடிக்க முடியாது. தற்போது வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியுள்ள ‘256 பிட் என்கிரிப்ட்' எனப்படும் ஒரு சங்கேத குறியீட்டை இடைமறித்து கண்டுபிடிக்க 100 ஆண்டுகள் கூட ஆகலாம்.
இத்தகைய வசதி தீவிரவாதிகளுக்கும், தேச விரோதிகளுக்கும் உதவும் வகையில் அமைந்து விடும் ஆபத்துள்ளது. இது தேசத்தின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே வாட்ஸ் அப் செயலிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல வைபர், டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளையும் தடை செய்ய வேண்டும் என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு முன்பு வரும் 29-ந்தேதி (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications