பீகாரில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து... பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
Recommended Video

வைஷாலி, பீகார்: பீகாரில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகி உள்ளனர். இதில் 14க்கும் அதிகமானோர் மோசமாக காயம் அடைந்துள்ளனர்.
பீகாரில் இருந்து டெல்லி நோக்கி சென்ற சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ்தான் இந்த கோர விபத்திற்கு உள்ளாகி உள்ளது. வைஷாலி மாவட்டம் சஹதாய் புசர்க் என்ற இடத்தில் உள்ள ஜோக்பானி - ஆனந்த் விஹார் டெர்மினலில் அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் பலர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

முழு வேகம்
இந்த விபத்து இன்று காலை சரியாக 3.58 மணிக்கு நடந்து இருந்தது. இந்த விபத்து நடந்த போது அந்த சூப்பர்பாஸ்ட் ரயில் தனது முழு வேகத்தில் சென்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். முதலில் மூன்று பெட்டிகள் தடம் மாறியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதன்பின் வரிசையாக மொத்தம் 11 பெட்டிகள் தடம் மாறி இருக்கிறது.

எத்தனை பெட்டிகள்
11 பெட்டிகள் மொத்தமாக தண்டவாளத்தில் இருந்து அப்படியே வெளியே வந்து தடம் புரண்டு இருக்கிறது. ஒரு ஏசி கோச், பின் S8, S9, S10 கோச் மற்றும் 4 சாதாரண கோச்கள் தடம் புரண்டு உள்ளது. இதற்கு அடியில் நிறைய மக்கள் பலர் சிக்கி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதனால் அங்கு மீட்பு பணி துரிதமாக நடந்து வருகிறது.

என்ன நிவாரணம்
தற்போது இவர்களுக்கு நிவாரண உதவி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ஆனால் உண்மையான காரணம்
ஆனால் இந்த விபத்திற்கு ரயிலின் வேகம் மட்டுமே முக்கியமான காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். ரயில் தண்டவாளத்தில் ஏதாவது பிரச்சனை நிகழ்ந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இப்போது அதிகாரிகள் மீட்பு பணியில் கவனம் செலுத்துவதால், பின்பு இதுகுறித்து விசாரிக்கப்படும் என்றுள்ளனர்.

மீட்பு பணிகள்
விபத்தில் சிக்கியவர்களை மீட்புப் படையினரும், உள்ளூர் மக்களும் இணைந்து மீட்டு வருகின்றனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் விபத்து குறித்த தகவல்களை அறிய ரயில்வே துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. சோன்பூர் - 06158221645 ஹாஜிப்பூர் - 06224272230 பரானி - 0627923222.

என்ன எண்ணிக்கை
ரயில் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகி உள்ளனர். இதில் 14க்கும் அதிகமானோர் மோசமாக காயம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள் இரண்டு வெவ்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications