தெலுங்கானாவை தடுக்க மத்திய அரசை கவிழ்ப்போம்- 'சீமாந்திரா' காங். எம்பிக்கள் முடிவு!!
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் உருவாவதைத் தடுக்கும் கடைசி ஆயுதமாக ஆதரவை வாபஸ் பெற்று மத்திய அரசை கவிழ்ப்பது என்று சீமாந்திரா காங்கிரஸ் எம்.பிக்கள் தீர்மானித்துள்ளனர்.
தெலுங்கானா தனி மாநிலம் அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. அத்துடன் தெலுங்கானா மசோதாவுக்கு ஒப்புதல் கோரி ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலோ அல்லது அடுத்த பட்ஜெட் கூட்டத் தொடரிலோ தெலுங்கானா மாநிலத்துக்கான மசோதா கொண்டுவரப்படுவது உறுதியாகி உள்ளது. இதை கடுமையாக எதிர்க்கும் சீமாந்திரா மக்களும் இறுதி எதிர்ப்பு போராட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.
2வது நாளாக பந்த்
தெலுங்கானாவுக்கு எதிராக கடலோர ஆந்திரா, ராயலசீமாவை உள்ளடக்கிய சீமாந்திராவில் இன்றும் 2வது நாளாக முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், மத்திய- மாநில அரசு அலுவலகங்கள், பெட்ரோல் நிலையங்கள், ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் இயக்கப்படாததால் நெடுஞ்சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
டென்ஷனில் திருப்பதி
பல்லாயிரக்கணக்கான மக்கள் குவியும் திருப்பதி திருமலை கோயிலுக்குச் செல்லும் வழியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற தெலுங்கு தேசம் கட்சியினரை போலீசார் அப்புறப்படுத்தியதால் அங்கு பதற்றம் நிலவியது.
பேருந்துகள் நிறுத்தம்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் 2வது நாளாக இன்றும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், திருப்பதி உள்ளிட்ட ஆந்திரம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்
அடுத்த கட்ட நடவடிக்கை
இந்த முழு அடைப்புடன் நிறுத்திவிடாமல் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெலுங்கானா அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்
தற்போதைய நிலையில் சீமாந்திராவில் 4 மத்திய அமைச்சர்கள் உட்பட 11 காங்கிரஸ் எம்.பி.க்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் மத்திய அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவது என்று முடிவு செய்திருக்கிறார்.
ஜனாதிபதியுடன் சந்திப்பு
நாளை மறுநாள் திங்கள்கிழமையன்று 11 எம்.பிக்களும் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தாங்கள் மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளப் போகும் கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவும் திட்டமிட்டிருக்கின்றனர்.
கவிழ்கிறது மத்திய அரசு?
அப்படி காங்கிரஸ் எம்.பிக்கள், ஆதரவு வாபஸ் கடிதத்தை கொடுக்கும் நிலையில் மத்திய அரசு கவிழும் நிலை உருவாகும். தற்போதைய சூழலில் மத்திய அரசு கவிழ்க்கப்படுவதுதான் தெலுங்கானாவை தடுக்க ஒரே வழி என்பதால் இதையே இறுதி ஆயுதமாக்கவும் சீமாந்திரா காங்கிரஸ் எம்.பிக்கள் முடிவு செய்திருக்கின்றனர்.
கிரீன் சிக்னல் கிரண்குமார்
மேலும் ஆந்திரா மாநில பிரிவினையைத் தடுக்க ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு மற்றும் ஒருமித்த கருத்துள்ள தலைவர்கள் அனைவருடனும் கை கோர்த்து, ஒருங்கிணைந்து செயல்பட சீமாந்திராவின் காங்கிரசாருக்கு முதல்வர் கிரண்குமார் ரெட்டி பச்சைகொடி காட்டியும் இருக்கிறார். இதனால் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் மேலும் தீவிரமடையக் கூடும் எனத் தெரிகிறது.