சீமாந்தரா மின் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! இருளில் இருந்து மீளும் ஆந்திரா
ஹைதராபாத்: முதல்வர் கிரண்குமார்ரெட்டியின் வேண்டுகோளை ஏற்று சீமந்தரா மின் ஊழியர்கள், இன்று தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
ஆந்திராவில், தெலுங்கானா எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக சீமந்திராவின் மின் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக மின்உற்பத்தி மற்றும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டதால் சீமந்திராவின் 13 மாவட்டங்கள் இருளில் மூழ்கியது.

இதனால் மருத்துவமனைகள் மற்றும் ரயில் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் கூட பாதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாது வீடுகளிலும் பொதுமக்கள் கடந்த 5 தினங்களாக மின்சாரம் இல்லாமல் மிகவும் அவதிக்குள்ளாயினர்.
இந்நிலையில் பாய்லின் புயலும் ஆந்திரா நோக்கி வருவதால், மக்களுக்கு மேலும் கூடுதல் சிரமங்கள் ஏற்படும் என்றும், இதனால் மனிதாபிமானத்துடன் போராட்டத்தை விடுமாறும் முதல்வர் கிரண் குமார் ரெட்டி மின் ஊழியர்களை கேட்டுக்கொண்டார். மேலும் போராட்டத்தை கைவிடாவிட்டால் 'எஸ்மா' சட்டம் பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் மின் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட முடிவு செய்து, போராட்டத்தை விலக்கி கொள்வதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பினார் ஆந்திர மாநில மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications