ஆந்திராவில் தெலுங்கானா– சீமாந்திரா அரசு ஊழியர்கள் மோதல்
ஹைதராபாத்: ஆந்திராவில் மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் சட்டமன்றம் முன்பு தெலுங்கானா, சீமாந்திரா ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் மோதல் மூண்டது.
தெலுங்கானா தனி மாநில மசோதா ஆந்திர சட்டசபையின் ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்பி உள்ளது.
ஆந்திர சட்டசபை சபாநாயகர் எஸ்.மனோகரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இந்த மசோதாவை 6 வார காலத்துக்குள் அதாவது ஜனவரி 23ம் தேதிக்குள் பரிசீலித்து பதில் அளிக்கும்படி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கால அவகாசம் அளித்து உள்ளார்.
இதனிடையே ஆந்திர சட்டசபை குளிர் கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரண்குமார் எதிர்ப்பு
அதே நேரத்தில் மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆந்திரத்தை இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இருப்பினும் புதிய மாநிலத்தை உருவாக்குவதில் மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

சமாதான முயற்சி
இந்நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக கட்சியின் பொது செயலாளர் திக்விஜய்சிங் இரண்டு நாள் பயணமாக ஆந்திராவிற்கு சென்றுள்ளார்.

ஊழியர்கள் போராட்டம்
ஹைதராபாத் வந்த திக்விஜய்சிங்கை எதிர்த்து தலைமை செயலக சீமாந்திரா அரசு ஊழியர்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

சீமாந்திரா ஊழியர்கள்
தெலுங்கான பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் அலுவலகம் அமைந்துள்ள சி.பிளாக் முன்பாக கூடிய சீமாந்திரா ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மாநில பிரிவினைக்கு எதிராக முழக்க மிட்டனர்.

தெலுங்கான ஊழியர்கள்
உடனே அங்கு வந்த தெலுங்கானா ஊழியர்கள் தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்யவேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

மூண்ட மோதல்
இதனையடுத்து அங்கு சீமாந்திரா, தெலுங்கானா பகுதி ஊழியர்கள் இடையே மோதல் மூண்டது. இதனையடுத்து அங்கு கூடியிருந்த போலீசார், சமாதான முயற்சியில் ஈடுபட்டனர்.

சட்டமன்ற முற்றுகை
இதனிடையே தெலுங்கானா மசோதாவினை சட்டசபையில் தாக்கல் செய்தால் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று ஆந்திர அரசு ஊழியர் சங்க போராட்டக்குழு எச்சரித்து உள்ளது.
விஜயவாடாவில் ஆந்திர ராயலசீமா உள்ளிட்ட 13 மாவட்ட வழக்கறிஞர் சங்க கூட்டம் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அரசு ஊழியர் சங்க போராட்ட குழு தலைவர் அசோக்பாபு இதனை தெரிவித்தார்.

முடக்க திட்டம்
தெலுங்கானா மசோதாவுக்கு எதிராக தேசிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட வேண்டும். ரயில் மறியல் நடத்த வேண்டும். வங்கிகளை செயல்பட விடக்கூடாது. மின் உற்பத்தியை நிறுத்தி விட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசு இறங்கி வரும்.

ஐக்கிய ஆந்திரா
ஐக்கிய ஆந்திராவை வலியுறுத்தி போராட்டம் செய்யாத அரசியல் கட்சி தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகளை சமூகத்தில் இருந்து விளக்கி வைக்க வேண்டும். அவர்களின் வீடுகளுக்கு மின், குடிநீர் சப்ளையை நிறுத்தி விட வேண்டும். அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு எந்த வழக்கறிஞரும் வாதாட கூடாது.

40 நாட்கள் கெடு
தெலுங்கானா மசோதாவிற்கு ஜனாதிபதி 40 நாட்கள் கெடு கொடுத்தபோதிலும் திக்விஜய்சிங் இப்போதே ஹைதராபாத்திற்கு வந்தது ஏன்?. தெலுங்கானா மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தால், சட்டமன்றத்தை முற்றுகையிடுவது தவிர வேறு வழியில்லை. அரசு ஊழியர்கள் எதற்கும் தயாராக உள்ளனர் என்றும் அசோக்பாபு கூறியுள்ளார்.

தொடரும் போராட்டம்
திக்விஜய்சிங் திரும்பிப் போகும்வரை எங்கள் ஆர்ப்பாட்டம் ஓயாது. ஆந்திராவை இரண்டாக்கினால் அதன் பலனை காங்கிரஸ் கட்சி அனுபவித்தே தீரும் என்று அவர்கள் ஆவேசமாக கூறினார்கள். தெலுங்கானா பிரச்சினையால் போராட்டம் தொடங்கியுள்ளதால் ஆந்திராவில் மீண்டும் பரபரப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications