திருப்பதி ஏழுமலையான தரிசிக்க போன தமிழக பக்தர்களை திருப்பி அனுப்பிய போராட்டக்காரர்கள்
சித்தூர்: சீமாந்திரா பகுதிகளில் நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக திருப்பதிக்கு பேருந்து மூலம் சென்ற பக்தர்களை போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பினர். இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து சென்று ஏழுமலையானை தரிசிக்கச் சென்றனர்.
ஒருங்கிணைந்த ஆந்திராவை சீமாந்திரா பகுதிகளில் உள்ள 13 மாவட்டங்களில் ஒருங்கிணைப்பு கூட்டுக்குழுவினர் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வங்கிகள், தபால் நிலையங்கள், பிஎஸ்என்எல் அலுவலகங்கள் ஆகியவற்றில் இருந்த ஊழியர்களை வெளியேற்றி போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வரும் 30ம் தேதி வரை நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சித்தூரில் வெள்ளியன்று தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் சாலைகளில் கார், ஜீப், லாரி ஆகியவை ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. சாலைகளின் குறுக்கே மரங்களை வெட்டிப் போட்டும், டயர்களை கொளுத்தி யும் வாகனங்களை செல்லவிடாமல் மறியலில் ஈடுபட்டிருந்தனர்.

2 ஆயிரம் தமிழக பக்தர்கள்
இந்நிலையில், புரட்டாசி 2வது சனிக்கிழமை என்பதால் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, சேலம், மதுரை, காஞ்சிபுரம், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சுற்றுலா பஸ்கள் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சித்தூர் வழியாக வந்தனர். அவர்களை சென்னை, பெங்களூர் பைபாஸ் சாலை, பலமனேர் சாலை, எம்எஸ்ஆர் கூட்டுரோடு, சித்தூர் பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைப்பு கூட்டுக்குழு, அரசு ஊழியர் சங்கம் மற்றும் அரசு பஸ் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் வழிமறித்தனர்.

சிதம்பரம்தான் காரணம்
எந்த வாகனங்களும் திருப்பதிக்கு செல்லக்கூடாது எனக்கூறியபடி, பஸ்களின் டயர்களில் இருந்த காற்றை வெளியேற்றி கோஷமிட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சிதம்பரம்தான் முதன்முதலில் தெலங்கானாவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தார். அதனால்தான் மத்திய அரசும் மாநிலத்தை பிரிக்க முடிவு செய்தது. எனவே பிரச்னை தீரும் வரை இந்த பக்கம் வராதீர்கள் என்று தெரிவித்தனர்.

பக்தர்கள் ஏமாற்றம்
இதனால் வேறு வழியின்றி திருப்பதிக்கு செல்லாமல் ஏராளமான பக்தர்கள் டயர்களில் காற்றை நிரப்பிக் கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒருசில பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் நடந்தே சென்றனர். மேலும் சிலர் சித்தூரில் இருந்து ரயிலில் புறப்பட்டனர்.

பாதயாத்திரை பக்தர்கள்
திருமலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் போராட்டக்காரர்கள் கடந்த 24ம் தேதி மறித்ததால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் 10 கி.மீ தூரம் நடந்து திருமலைக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதல் பல்லாயிரக்கணக்கான தமிழக பக்தர்கள் ஏழுமலையானை தரிசிப்பது வாடிக்கையாகும். இந்த ஆண்டு போராட்டம் நடைபெறுவதால் ஏராளாமானோர் திருப்பதிக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

பிரம்மோற்சவம்
இன்னும் சில தினங்களில் திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. போராட்டம் தீவிமடைந்துள்ளதன் காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு வருவார்களா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications