காஷ்மீர் மாநிலத்திற்கு தன்னாட்சி அதிகாரம்.. சிதம்பரம் பரபரப்பு பேச்சு!
காஷ்மீரில் பிரிவினைவாதிகள் சுதந்திரம் கேட்ட போது சிலர் தன்னாட்சி அதிகாரம் கேட்டதாக முன்னாள் உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீரில் பிரிவினைவாதிகள் விடுத்த கோரிக்கை குறித்த அதிர்ச்சியான தகவலை முன்னாள் உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ளார்.
குஜராத்தின் ராஜ்கோட்டிற்கு சென்றுள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பல்வேறு பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் முக்கியமான ஒரு விஷயம் காஷ்மீர் பிரச்னையைப் பற்றியது. காஷ்மீர் பிரிவினைவாதிகள் சுதந்திரம் கேட்டு போராடிய போது சிலர் தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
நான் உள்துறை அமைச்சராக இருந்த போது ஜம்மு காஷ்மீர் மக்களிடம் பேசியது வரை புரிந்து கொண்ட விஷயம் சுதந்திரம் கேட்ட போது அவர்களில் பெரும்பாலானவர்கள் தன்னாட்சி கேட்டனர் என்றார். அதனுடன் நின்றுவிடாடல் அவர்கள் தன்னாட்சி அதிகாரம் கேட்பது நியாயமானது தான், அது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்யலாம் என்றும் ப.சிதம்பரம் கூறினார்.

மத்திய அரசு பரிசீலிக்கலாம்
மத்திய அரசு ஜம்மு காஷ்மீரில் எந்தெந்த பகுதிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கொடுக்கலாம் என ஆலோசிக்கலாம். இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் இருந்தாலும் 370 சட்டப்பிரிவின்படி அதிக சக்திகளைக் கொண்ட இடமாக இது இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது என்று சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக உரிமை
இதே போன்று காஷ்மீர் இளைஞர்களுக்கு ப.சிதம்பரம் ஒரு கோரிக்கையையும் விடுத்துள்ளார். உங்களின் ஜனநாயக உரிமைக்காக குரல் கொடுக்க உங்களுக்கு முழுஅதிகாரம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்று புரிதல் இல்லை
இதனைத் தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜக தாஜ்மஹால் குறித்து சர்ச்சை எழுப்புவது குறித்தும் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்தார். தாஜ்மஹாலைப் பற்றி தவறாகப் பேசுபவர்களுக்கு ஒன்று வரலாறு தெரியாமல் இருக்க வேண்டும் அல்லது இந்தியாவின் நாகரிகம் வளர்ந்த முறை பற்றி புரிதல் இல்லாமல் இருக்கும் என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

தீவிரவாதியுடன் படேலுக்கு தொடர்பா?
காங்கிரஸ் மூத்தத் தலைவர் அகமது படேலை தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புபடுத்தி பேசுவதை ப.சிதம்பரம் கண்டித்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் அவரை வைத்து பாஜக அகமது படேலை இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்துகிறது. 3 ஆண்டுகளுக்கு முன்னர் அகமது படேல் அறக்கட்டளைநிர்வாகியாக இருந்த ஒரு மருத்துவமனையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி பணியாற்றியுள்ளார்.

இதுக்குப் போயி ராஜினாமாவா?
3 ஆண்டுகளுக்கு முன்னர் அகமது படேல் நிர்வாகியாக இருந்த மருத்துவமனையில் பணியாற்றியவர் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டவர் என்பதால் அந்த விவகாரத்தில் அகமது படேலை தொடர்புபடுத்துவது எந்த வகையில் நியாயம் என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த காரணத்தைக் கூறி அவரை பதவி விலக பாஜக சொல்வது வேடிக்கையாக உள்ளது என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications