காஷ்மீரில் போலி என்கவுண்ட்டரை கண்டித்து போராட்டம்- யாசின் மாலிக், மஸ்ரத் ஆலம் கைது!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய போலி என்கவுண்ட்டரைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் பங்கேற்க சென்ற பிரிவினைவாத தலைவர்கள் யாசின் மாலிக், மஸ்ரத் ஆலம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய என்கவுண்ட்டரில் காலித் முஸாபர் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் இறந்தவர் தீவிரவாதி அல்ல என்றும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் இங்குள்ள டிரால் பகுதியில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்டு வந்த ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்தலைவர் யாசின் மாலிக், மற்றொரு தலைவரான ஒருவரான மஸரத் ஆலம் உள்ளிட்டோரை கைது செய்த போலீசார் அவர்கள் அனைவரையும் தடுப்புக் காவலில் அடைத்து வைத்துள்ளனர்.
இதனிடையே போராட்டம் நடைபெற்ற டிரால் பகுதியில் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீசார் மீது சிலர் கற்களை வீசி தாக்கினர். இதனால் போராட்டக் களம் வன்முறைக் களமாக மாறியது.
வன்முறையாளர்களை விரட்டியடிக்கும் விதமாக போலீசார் தடியடி, கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தினர். இதில் 6 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications