சசிகலாவின் "ஜெயில் மேட்" சயனைடு மல்லிகா பெல்காம் சிறைக்கு மாற்றம்!
பெங்களூரில் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவின் பக்கத்து அறையில் உள்ள சயனைடு மல்லிகா, பெலகாவியில் உள்ள சிறைக்கு மாற்றப்படுகிறார்.
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவின் பக்கத்து அறையைச் சேர்ந்தவரும், தொடர் கொலை வழக்கு குற்றவாளியுமான சயனைடு மல்லிகா பெலகாவி சிறைக்கு இந்த வார தொடக்கத்தில் மாற்றப்பட உள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது சிறை அறைக்கு பக்கத்து அறையில் தொடர் கொலையாளியான சயனைடு மல்லிகா அடைக்கப்பட்டுள்ளார். இவர் பெங்களூரைச் சுற்றிவுள்ள கோயில்களுக்கு வரும் பணக்கார பெண்களுக்கு வலை விரித்து அவர்களுடன் நட்பு பாராட்டி, பின்னர் சயனைடு கொடுத்து அவர்களது நகைகளைக் கொள்ளையடிப்பார்.

அதிமுக வக்கீல்கள் மனு
இதைப்போல் 6 பெண்களைத் தொடர்ந்து கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2008-இல் கைது செய்யப்பட்ட மல்லிகா, பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பயங்கர குற்றவாளியான மல்லிகாவை, சசிகலா இருக்கும் சிறையில் தங்க வைத்துள்ளதால் சசியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அதிமுக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

சயனைடு மல்லிகா மாற்றம்
இதனால் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுமாறும் சிறைத் துறையிடம் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில், சயனைடு மல்லிகாயை , வடக்கு கர்நாடகத்தில் பெலகாவியில் உள்ள பழமையான ஹிண்டல்கா சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பெங்களூர் சிறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர் இந்த வார தொடக்கத்தில் மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சசிக்கு உணவு வாங்கும் மல்லிகா
இதுகுறித்து பரப்பன அக்ரஹார சிறைத் துறை அதிகாரிகள் கூறுகையில் சில பாதுகாப்பு காரணங்களுக்காக மல்லிகாவை வேறொரு சிறைக்கு மாற்ற முடிவு செய்துள்ளோம். சசிகலாவுடன் மல்லிகா நட்புடனும், சுமூகமாகவும் இருக்கிறார். உணவு வாங்குவதற்கு கூட சசிகலாவை வரிசையில் காத்திருக்க விடாமல் மல்லிகாவே சசிக்கு சேர்த்து உணவு வாங்கி கொடுக்கிறார் என்றனர்.

ஹிண்டல்கா சிறை
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், மல்லிகாவை சிறை மாற்றம் செய்யும் விவகாரத்தில் ரகசியம் காக்கப்படுகிறது. இதுகுறித்து மல்லிகாவுக்கே தெரியாது. வேறொரு அறைக்கு மாற்றப்பட உள்ளதால் உடைமைகளை மூட்டைக் கட்டி தயாராக இருக்கும்படியே சிறைத் துறையினர் மல்லிகாவிடம் தெரிவித்துள்ளனர். மல்லிகா மாற்றம் செய்யப்படவுள்ள ஹிண்டல்கா சிறையில் கொலை குற்றவாளிகளும், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றவாளிகளும் ஏராளமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications