பீகாரில் பயணிகள் ரயிலில் 7 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
பாட்னா: பீகாரில் பயணிகள் ரயிலில் கேட்பார் அற்று கிடந்த அட்டைப்பெட்டியில் 7 வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
பீகார் மாநிலம் கதிஹாரில் இருந்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கதிஹாரில் ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீசாரும் சேர்ந்து பயணிகள் ரயிலில் தீவிர சோதனை நடத்தினர். பொது கம்பார்ட்மென்ட்டில் ஒரு இருக்கைக்கு அடியில் கேட்பார் அற்று அட்டைப் பெட்டி ஒன்று இருந்தது.
பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் 7 வெடிகுண்டுகள் இருந்தது தெரிய வந்தது. போலீசார் வெடிகுண்டுகளை கைப்பற்றி வெடிகுண்டு நிபுணர்களிடம் அளித்தனர். அவர்கள் குண்டுகளை செயல் இழக்கச் செய்தனர்.
குண்டுகள் கொள்ளையர்களுடையதாக இருக்கக்கூடும் என்று ரயில்வே போலீஸ் எஸ்.பி. ஜிதேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.