மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரத் தீ விபத்து !! 7 பேர் மூச்சுத் திணறி பலி !!!
மும்பை : 21 தளங்கள் கொண்ட குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் 7 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். 25 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புறநகரான சாந்திவிலி அருகே போவாய் பகுதியில் இந்த தீ விபத்து நிகழ்ந்தது. அங்குள்ள குடியிருப்பின் 14 வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் எழுந்த புகை அதற்கு மேல் உள்ள தளங்களையும் ஆக்கிரமிக்க, அந்த தளங்களில் வசித்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 15 க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சுவாசிக்க திணறி தவித்தவர்களை நவீன ஏணியைப் பயன்படுத்தி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
எனினும் மேல் தளங்களில் வசித்தவர்களில் 7 பேர் சுவாசிக்க முடியாமல் உயிரிழந்தனர். மேலும் 25 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.