அசாமில் 300 அடி 'எலி வளை' சுரங்கத்தில் புகுந்த தண்ணீர்.. தொழிலாளர்கள் பலர் சிக்கியிருக்கலாம்! அச்சம்
கவுகாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், எலி வளை சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்ததில் நிலக்கரி வெட்டி எடுக்கும் தொழிலாளர்கள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 300 அடி ஆழம் கொண்ட இந்த சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளதால் மீட்புக்குழுவினர் ஸ்பாட்டிற்கு விரைந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின் ஊரக பகுதியான உம்ரன்க்ஸோ என்ற இடத்தில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. 300 அடி ஆழம் கொண்ட இந்த சுரங்கத்தில், நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். ரேட் ஹோல் (எலி வளை) எனப்படும் மிக ஆபத்தான டெக்னிக்கை பயன்படுத்தி இந்த சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது.

சுரங்கத்துக்குள் 100 அடிக்கு தண்ணீர்
மேகாலயா மாநில எல்லையை ஒட்டியுள்ள இடத்தில் அமைந்து இருக்கும் நிலக்கரி சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுரங்கத்தில் சுமார் 100 அடிக்கு தண்ணீர் இருப்பதாக கூறப்படும் நிலையில், இதில் தொழிலாளர்கள் பலரும் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இது குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக போலீசாரும் மீட்புக்குழுவினரும் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.

15 தொழிலாளர்கள் சிக்கினர்
முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜைண்டியா மலை மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது. அருகில் இருந்த ஆற்றில் இருந்து வெளியேறிய நீர், சுரங்கத்திற்குள் புகுந்தது. இதில், 15 தொழிலாளர்கள் சிக்கினர். மீட்பு பணிக்கு சென்ற மீட்புக்குழு வெறும் இரண்டு பேரின் சடலத்தை மட்டுமே பார்க்க முடிந்ததாக அப்போதய மீட்புக்குழு தலைவர் எஸ்கே சாஸ்திரி கூறினார்.
மேகாலயாவில் சட்ட விரோதமாக நிலக்கரி சுரங்கங்கள் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. சட்ட விரோத சுரங்கங்களை கட்டுப்படுத்த தவறியதாக மேகாலயா அரசுக்கு ரூ.100 கோடி அபராதத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2019 ஆம் ஆண்டு விதித்தது.
எலி வளை சுரங்க பணி என்றால் என்ன?
எலி வளை சுரங்க பணி என்பது சிறிய குழிகளை தோண்டி, அதற்குள் சென்று நிலக்கரியை வெட்டி எடுப்பதாகும். சுமார் 4 அடி அகலம் கொண்ட இந்த சுரங்கத்திற்குள், தொழிலாளர்கள் கைகளால் நிலக்கரியை வெட்டி எடுப்பார்கள். இது மிகவும் ஆபத்தானது என்பது மட்டும் இன்றி சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால் கடந்த 2014 ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் இதற்கு தடை விதித்தது.












Click it and Unblock the Notifications