“இவர்களெல்லாம் துரோகிகள்..” சர்ச்சையை ஏற்படுத்திய ஜமா மஸ்ஜித் இமாமின் கருத்து! பரபர குஜராத் தேர்தல்
காந்திநகர்: குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அகமதாபாத்தில் உள்ள ஜமா மஸ்ஜிதின் ஷாஹி இமாம் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எப்படி என்ன சொன்னார்? குஜராத் தேர்தலில் அவரது கருத்து என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 1ம் தேதி 89 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து 5ம் தேதியான நாளை 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான பிரசாரங்கள் நேற்றுடன் முடிந்துள்ளன. ஒட்டுமொத்தமாக 182 தொகுதிகளில் பாஜக ஒரேயொரு இஸ்லாமிய வேட்பாளரைக்கூட களமிறக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் 6, ஆம் ஆத்மி இரண்டு என இஸ்லாமிய வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.
எதிர்ப்பு
இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள ஜமா மஸ்ஜிதின் ஷாஹி இமாம் ஷபீர் அகமது சித்திக் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தேர்தலில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்களை வேட்பாளராக நிற்க வைப்பதை கடுமையாக கண்டிக்கிறேன். இவ்வாறு செயல்படுவது இஸ்லாத்திற்கு எதிரானது. இவ்வாறு செய்பவர்கள் இஸ்லாத்தை பலவீனப்படுத்துகிறார்கள். இந்த கட்சிகளை கடுமையாக கண்டிக்கிறேன்" என்று கூறியுள்ளார். இந்த கருத்து இஸ்லாமிய கட்சிகளுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் பாஜக இஸ்லாமிய வேட்பாளர்களை நிற்க வைக்காததாலும், காங்கிரஸ் குறைந்த அளவே இஸ்லாமியர்களை களத்தில் இறக்கியதாலும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அம்மதத்தை சேர்ந்தவர்களே சுயேட்சையாக களம் இறங்கியுள்ளனர்.
காங்கிரஸ்
அதாவது, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் சுமார் 60-80 சதவிகிதமானோர் அம்மதத்தை சேர்ந்தவர்கள்தான். இவர்களில் 80% பேர் சுயேட்சை வேட்பாளர்களாவார்கள். அதாவது, சூரத் மாவட்டத்தில் உள்ள லிம்பாயத் சட்டசபை தொகுதி இஸ்லாமியர்கள் பலம் வாய்ந்த தொகுதி. ஆனால் இந்த தொகுதியில் காங்கிரஸ் இஸ்லாமிய வேட்பாளரை களமிறக்கவில்லை. இதனால் அவர்கள் இதர கட்சிகள் சார்பிலும், சுயேட்சையாகவும் போட்டியிட முன்வந்துள்ளனர். இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் 80% பேர் இஸ்லாமியர்களாவார்கள். இதே நிலைமைதான் பாபுநகர், ஜுஹாபுரா தொகுதிகளிலும் நிலவுகிறது.
இஸ்லாமிய வேட்பாளர்கள்
இவ்வாறு சுயேட்சையாக பிரிந்து போட்டியிடுவது அவர்களின் வாக்கு வங்கியை பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த முறை தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் இந்த முறை குஜராத்தை கைப்பற்றிவிட்டால் சிபிஎம் சாதனையை பாஜக சமன் செய்துவிடும். அதாவது, மேற்கு வங்கத்தில் சிபிஎம் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்றிருக்கிறது. இதுவரை இத்தனை முறை ஒரே கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்ததில்லை. ஆனால், பாஜக இதற்கு நெருக்கமா இருக்கிறது. அதாவது குஜராத்தில் பாஜக இதுவரை 6 முறை வெற்றி பெற்றிருக்கிறது. இந்த முறை வெற்றி பெற்றால் சிபிஎம் சாதனையை சமன் செய்துவிடும். மறுபுறத்தில் இதனை முறியடிக்க காங்கிரஸ் தொடர்ந்து முயன்று வருகிறது. காங்கிரசுக்கு குஜராத்தில் பக்கபலமாக இருப்பது சிறுபான்மையினர் வாக்கு வங்கிதான்.
அங்கீகாரம்
ஆனால் இந்த முறை ஆம் ஆத்மி அதனை கைப்பற்றும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அரசியல் விமர்சகர்களின் ஆருடத்திற்கு அகமதாபாத் ஜமா மஸ்ஜிதின் ஷாஹி இமாம் ஷபீர் அகமது சித்திக் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இஸ்லாமிய பெண் வேட்பாளர்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய அவர், மாநிலத்தில் மும்முனை போட்டியையும் இஸ்லாமிய மக்கள் ஏற்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் ஆம் ஆத்மியின் அரசியல் செயல்பாடுகளை அவர் அங்கீகரிக்கவில்லை என்பது தெளிவாகிறது.