மும்பை பலாத்காரம்: 4 மணி நேர விசாரணை... நீதிபதி முன் மயங்கி விழுந்த பெண் பத்திரிக்கையாளர்
மும்பை: சக்தி மில் வளாகத்தில் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட மும்பை பெண் பத்திரிக்கையாளர், நீதிபதி முன் குற்றவாளிகளை அடையாளம் காட்டி, வாக்குமூலம் அளித்த போது மயங்கி விழுந்ததால் கோர்ட் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி, மும்பையில் பெண் பத்திரிக்கையாளார் ஒருவர் தனது நண்பர் ஒருவருடன் செய்தி சேகரிக்க சக்தி மில் வளாகத்திற்கு சென்ற போது, 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
பின்னர், பெண் பத்திரிக்கையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

குற்றப்பத்திரிக்கை...
கடந்த மாதம் 19ம் தேதி, இந்த வழக்கு சம்பந்தமான 600 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். நீதிபதி ஷாலினி முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது.

குற்றவாளிகள் ஆஜர்...
நேற்று 3-வது நாளாக நடைபெற்ற விசாரணையில், இளம் குற்றவாளி தவிர விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி, சலீம் அன்சாரி சிராஜ் ரெஹ்மான் ஆகிய 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அடையாளம் தெரியாதபடி...
பாதிக்கப்பட்ட பெண் பத்திரிக்கையாளரும் தாயாருடன் கோர்ட்டிற்கு வந்திருந்தார். தலைக்கு முக்காடிட்டு அழைத்து வரப்பட்ட அவருடன், அவரை ஒத்த உடல் அமைப்பில் மேலும் 3 பேர் முக்காடிட்டு வந்தனர். பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் அடையாளம் வெளியில் தெரியாவண்ணம் இவ்வாறு திட்டமிடப்பட்டது.

வாக்குமூலம்....
வழக்கு விசாரணையின் போது குற்றவாளிகளை அடையாளம் காட்டிய பெண் பத்திரிக்கையாளர், அதனைத் தொடர்ந்து, நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.

கொடுமையான சம்பவம்....
காலையில் ஆரம்பித்த விசாரணை மதிய உணவு இடவேளையைத் தொடர்ந்து மீண்டும் நடந்தது. கிட்டத்தட்ட 4 மணி நேரங்களாக தனக்கு நேர்ந்த கொடூரத்தை பற்றி விவரித்துக்கொண்டு இருந்தார் அப்பெண்.

மயக்கம்....
இதனால் களைப்பும், மனச்சோர்வும் அடைந்த அப்பெண், தனக்கு அமர்வதற்கு சேர் வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனபோதும், மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டவராக காணப்பட்ட அவர், திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

இன்றும் விசாரணை.....
உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே வழக்கு விசாரணையை இன்றைக்கு (வெள்ளிக்கிழமை) நீதிபதி ஷாலினி தள்ளிவைத்தார்.

வெளிவராத உண்மைகள்....
விசாரணையின் போது, போலீசாரிடம் கூறாத பல விஷயங்களைப் பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி முன் கூறியதாக தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications