ராகுலை 'இளவரசர்' என்று அழைக்கக் கூடாது என்றால் 'மன்னர்' என்று அழைக்கலாமா?: பாஜக
மும்பை: ராகுல் காந்தியை குஜராத் முதல்வர் மோடி இளவரசர் என்று அழைப்பதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளதே, அப்படி என்றால் அவரை மன்னர் என்று அழைக்கலாமா என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி மேடைகளில் பேசுகையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை இளவரசர் என்று அழைத்து வருகிறார். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பரம்பரை அரசியலை காங்கிரஸ் நிறுத்தினால் தான் ராகுலை இளவரசர் என்று அழைப்பதை தான் நிறுத்தப் போவதாக மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லெகி கூறுகையில்,
ராகுலை இளவரசர் என்று அழைக்கக் கூடாது என்றால் மன்னர் என்று அழைக்கலாமா?. பாட்னாவில் மோடியின் பேரணி நடந்த இடத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் பற்றி அரசு தரப்பும், காங்கிரஸ் தலைவர்களும் பொறுப்பில்லாமல் பேசுகிறார்கள். நம் நாட்டில் இந்தியன் முஜாஹிதீன் வளர மத்திய அரசின் மெத்தனமே காரணம். இந்தியன் முஜாஹிதீன் எந்த குறிப்பிட்ட மதத்திற்காகவும் வேலை செய்யவில்லை. மாறாக நாட்டை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தும் மோடி பேரணிக்கு சென்றார். இல்லை என்றால் அது தவறான தகவல் பரவக் காரணமாகிவிடும். மோடிக்கு நாங்கள் சிறப்பு பாதுகாப்பு கேட்டிருந்தோம். அது ஏன் சிறப்பு பாதுகாப்பு ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கு மட்டும் அளிக்கப்படுகிறது? என்றார்.












Click it and Unblock the Notifications