மகாராஷ்டிராவில் தடையை மீறி சனி பகவான் கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் கைது !
அகமத்நகர்: மகராஷ்டிர மாநிலம் அகமத்நகரில் அமைந்துள்ள பழமையான சனிப் பகவான் கோயிலுக்குள் தடையை மீறி நுழைய முயன்ற 350 பெண்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகமத்நகர் மாவட்டம், சனி ஷிங்கனபூர் கிராமத்தில் உள்ளது சனி பகவான் கோயில். இங்கு ஐந்து அடி உயரத்தில் கருங்கல்லால் ஆன சனி பகவான் சிலை மேற்கூரையில்லாத நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்குள் பெண்கள் சென்று வழிபடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற சனி பகவான் கோயிலுக்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்வது வழக்கம்.

இந்த கிராமத்தில் வீடுகளுக்கு கதவுகள், பூட்டு எதுவும் கிடையாது. திருட்டு பயம் இல்லாத ஊர். இங்கிருக்கும் யுகோ கிளை வங்கிக்கும் பூட்டு கிடையாது. திருடினால் சனி பகவான் தண்டித்துவிடுவார் என்ற பயம் மக்களிடையே உள்ளது. ஆதலால் திருட்டு பயம் கிடையாது.
இந்நிலையில் 'பூமாதா படை' என்ற பெயரில் தொடங்கப்பட்ட ஒரு பெண்கள் அமைப்பு, கோயிலுக்குள் சென்று வழிபடுவது என தீர்மானித்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கோயிலுக்கு செல்லும் அனைத்து வழிகளையும் மூடி 'சீல்' வைத்தது. கோயிலைச் சுற்றி ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
சுமார் 350 பெண்கள் மற்றும் அந்த அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய் தலைமையில் நேற்று தடையை மீறி கோயிலுக்குள் செல்வது என தீர்மானித்தனர். பேருந்தில் புறப்பட்ட அவர்களை கோயிலிலிருந்து சுமார் 70 கிமீ முன்பாக சுபா கிராமம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சுபா காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications