சோனியாவிடம் திட்டு.. மோடியிடம் புகழாரம்- திரும்பிப் பார்க்க வைக்கும் சசி தரூர்
டெல்லி : நாடாளுமன்றம் சுமூகமாகச் செயல்பட காங்கிரஸ் அனுமதிக்கவேண்டும் என சசி தரூர் வலியுறுத்தியதைத் தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாடுகளை மீறுவதாக சோனியா காந்தி கண்டித்தது ஒருபுறம் என்றால், மறுபுறம் காங்கிரசின் முக்கிய எதிரி கட்சி மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜ.க. வைச் சேர்ந்த நாட்டின் பிரதமருமான மோடியிடம் பாராட்டும் பெற்றுள்ளார் சசி தரூர்.
ஆக்ஸ்போர்ட் யூனியன் சொசைட்டியில் பிரிட்டனின் காலனியாதிக்கம் பற்றிய சசி தரூரின் புள்ளி விவரத்துடன் கூடிய அனல் பறந்த உரை இணையதளங்களில் லட்சக்கணக்கான இந்தியர்களைக் கவர்ந்துள்ள நிலையில், அவரது வாதத் திறமையை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கான ஆராய்ச்சி முயற்சியைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "சசி தரூரின் பேச்சு தற்போது யூடியூபில் வைரலாகியுள்ளது. நாட்டுப்பற்றுடைய இந்தியர்களின் உணர்வுகளுடன் சசிதரூரின் பேச்சு இரண்டறக் கலந்துள்ளது.
சரியான விஷயங்களை சரியான இடத்தில் திறமையான வாதங்களை முன்வைப்பதன் மூலம் என்ன மாதிரியான எண்ண அலைகள் ஏற்படும் என்பதை சசிதரூரின் பேச்சு எடுத்துக்காட்டியுள்ளது" என்று சசிதரூரை வெகுவாக பாராட்டினார்.
அப்போது முதல் வரிசையில் அமர்ந்திருந்த சசி தரூர், பிரதமர் மோடியின் பாராட்டை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார்.
அண்மையில், பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா' திட்டத்திற்கான அழைப்பை ஏற்றுக்கொண்ட சசி தரூர், அவரது யோகா தின செயல்பாடுகளைப் பாரட்டியது குறிப்பிடத்தக்கது.
இதனால் காங்கிரஸ் தலைமையின் அதிருப்திக்கு ஆளானதும் சுட்டிக்காட்டப்படவேண்டும்.












Click it and Unblock the Notifications