மனைவி மரணம் அதிர்ச்சி: எய்ம்ஸ் மருத்துவமனையில் சசி தரூருக்கு சிகிச்சை
டெல்லி: மனைவி சுனந்தாவின் மரணத்தை தொடர்ந்து நெஞ்சுவலி ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய அமைச்சர் சசிதரூ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா நேற்று இரவு டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உடல் நலக்குறைவால் இறந்தாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுனந்தா தங்கியிருந்த அறையை டெல்லி காவல்துறையினரும், தடயவியல் நிபுணர்களும் முழுமையாக ஆய்வு செய்தனர். பின்னர், சசிதரூர் முன்னிலையில் நள்ளிரவில் அந்த அறையை காவல்துறையினர் சீல் வைத்தனர்.
சம்பவம் நிகழ்ந்த நட்சத்திர உணவு விடுதியில் உள்ள ரகசிய கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மணமான 7 ஆண்டுகளுக்குள் சுனந்தா காலமாகி இருப்பதால் சார்பதிவாளர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுனந்தாவின் உடல், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், மனைவி இறந்த துக்கத்தில் இருந்த சசிதரூருக்கு அதிகாலை 3 மணி அளவில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அதன் பின் சாதாரண சிகிச்சை பிரிவிற்கு அவர் மாற்றப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியேறி விட்டார்.
இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் டி.கே.சர்மா கூறுகையில், இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை அல்ல. அவருக்கு சில பிரச்னைகள் உள்ளன. அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தற்போது அவர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறி விட்டார்" என்றார்