சுனந்தாவை விலக்கி விட்டு பாக். செய்தியாளர் மெஹர் தரார மணக்கத் திட்டமிட்ட சசி தரூர்?
டெல்லி: சுனந்தா புஷ்கரை விவாகரத்து செய்து விட்டு, பாகிஸ்தான் பெண் செய்தியாளர் மெஹர் தராரை மணக்க சசி தரூர் திட்டமிட்டிருந்தார் என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
சுனந்தா புஷ்கர் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்புதான் சசி தரூர்- மெஹர் தரார் குறித்த பரபரப்பு விஸ்வரூபம் எடுத்தது.
இந்த விவகாரம் வெடித்துக் கிளம்பிய சில நாட்களிலேயே சுனந்தா மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது மரணத்தின் மர்மம் கூட இன்னும் விலகவில்லை. இந்த நிலையில் உண்மையில், மெஹர் தராரை மணக்க சசி தரூர் முடிவு செய்திருந்ததாகவும், இதற்காக சுனந்தாவை விவாகரத்து செய்யவும் அவர் விரும்பியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
டிவியில் செய்தி
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு பின்னர் மெஹர் தராரை மணக்க சசி தரூர் ஆயத்தமாகி வந்ததாக சுனந்தாவின் உறவினர்களும், நண்பர்களும், சுனந்தா மரணம் தொடர்பான விசாரணையாளர்களிடம் தெரிவித்ததாக செய்தி சேனல் ஒன்று தெரிவித்துள்ளது.
பல பெண்களுடன் தரூருக்குத் தொடர்பு
மேலும் சுனந்தாவின் நெருங்கிய தோழியும், பத்திரிக்கையாளருமான நளினி சிங், சுனந்தா வீட்டு வேலைக்காரர் நாராயண் சிங் ஆகியோர், சசி தரூருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளனராம்.
கணவரின் செயலால் கோபமடைந்த சுனந்தா
தனது கணவர் குறித்து அறிய வந்ததும் சுனந்தா ஆத்திரமடைந்து அவருடன் சண்டை பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் விரக்தி அடைந்து காணப்பட்டார் என்றும் பெரும் மன உளைச்சலுக்குள்ளானார் என்றும் கூறப்படுகிறது.
துபாய் ஹோட்டலில் 3 நாட்கள் மெஹருடன் தங்கல்
2013ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மெஹர் தராரை முதல் முறையாக துபாயில் வைத்து சந்தித்தாராம் தரூர். இருவரும் 3 நாட்கள் ஒரு ஹோட்டலில் சேர்ந்து தங்கியிருந்துள்ளனர். இதுதொடர்பான ஆதாரங்களை துபாயைச் சேர்ந்த சுனந்தாவின் நண்பர்கள் திரட்டிக் கொடுத்துள்ளனராம்.
விமானத்தில் கடும் சண்டை
இந்த விவகாரம் தொடர்பாக ஜனவரி 15ம் தேதி திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு வந்தபோது விமானத்தில் வைத்தே தரூருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம் சுனந்தா. இதை அத்தனை பயணிகளும் பார்த்துள்ளனர். டெல்லி வந்து சேரும் வரை சண்டை ஓயவில்லையாம்.
ஜனவரி 17ல் மரணம்
இந்த சண்டை நடந்த 2 நாட்களில் அதாவது ஜனவரி 17ம் தேதி இரவு டெல்லி லீலா பாலேஸ் ஹோட்டலில் தான் தங்கியிருந்த 345ம் எண் அறையில் சுனந்தா பிணமாகக் கிடந்தார். அப்போது அருகில் சசி தரூர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.