டெல்லியில் ஒரு "பைத்தியக்கார முதல்வர்".: கேஜ்ரிவால் மீது சுஷில்குமார் ஷிண்டே கடும் தாக்கு!
டெல்லியில் டென்மார்க் நாட்டு பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்திலும், வரதட்சணைக் கொடுமை செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்ட பிரச்சினையிலும், டெல்லியில் உகாண்டா நாட்டு பெண்கள் தங்கி இருக்கும் ஒரு பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபசாரம் நடப்பதாக எழுந்த புகார் தொடர்பான பிரச்சனையிலும் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று மாநில அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த பிரச்சினையில் 4 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மியினர் டெல்லில் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பெயரை குறிப்பிடாமல் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அரவிந்த் கேஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலியில் பேசிய சுஷில் குமார் ஷிண்டே, நான் கேர்வாடியில் காவல்துறையில் இருந்த போது, எனது திருமணத்திற்கு பின்னர் அங்கு கலவரம் நடந்தை அடுத்து எனது விடுப்பு ரத்து செய்யப்பட்டது.
தற்போது பைத்தியக்கார முதல்வர் (டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்) ஒருவரின் தர்ணாவால் நான் போலீசாரின் விடுமுறையை ரத்து செய்துள்ளேன் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால் அரவிந்த் கேஜ்ரிவாலின் பெயரை அவர் தெரிவிக்கவில்லை.
4 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரவிந்த் கேஜ்ரிவால் தர்ணா நடத்திய போது. துணை நிலை ஆளுநர் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலை கேட்டுக் கொண்டார். அப்போது பகர்கஞ்ச் மற்றும் மாளவியநகர் காவல் நிலைய 2 அதிகாரிகளை விடுப்பில் செல்லுமாறு உத்தரவிடப்பட்டது.
இதனை அடுத்து 2 நாள் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது