மும்பை மெட்ரோபாலிட்டனில் நாங்கதான் கிங்.. பாஜக, சிவசேனா அசத்தல்.. என்ன காரணம்?
மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில், பாஜக மற்றும் சிவசேனா தங்கள் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்தியுள்ளன.
பால்கர், ராய்காட் மற்றும் தானே மாவட்டங்கள் உள்ளடங்கிய மும்பையின் புறநகர் பகுதிகளில் மொத்தம் 24 தொகுதிகளில் 17 தொகுதிகளை பாஜக கூட்டணி வென்றுள்ளது.
புல்லட் ரயில், புதிய விமான நிலையம் உள்ளிட்ட பல கோடி மதிப்பு கொண்ட உள்கட்டமைப்பு வசதி திட்டங்கள் இந்த பகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிக்கான மக்கள் அங்கீகாரமாக இந்த வெற்றி பார்க்கப்படுகிறது.

சிவசேனா வாக்கு சதவீதம்
வாக்கு சதவீதத்தை பொறுத்த அளவிலும் சிவசேனா கட்சிக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளன. 2014ஆம் ஆண்டு இந்த பிராந்தியத்தில் உள்ள 24 சட்டசபை தொகுதிகளில் 22 சதவீதம் வாக்குகளை பெற்ற சிவசேனா, இப்போது 29 சதவீதம் வாக்குகளை உயர்த்தி அசத்தியுள்ளது. பால்கர் பகுதியில். சிவசேனா மிகவும் பலவீனமாக இருப்பதாக கூறப்படுவது உண்டு. ஆனால் இந்த முறை அதிலும் கூட வாக்கு சதவீதத்தை அதிகரித்துள்ளது அந்த கட்சி.

கூடுதல் தொகுதி
பாஜக இந்த முறை, கடந்த முறையை விடவும் இங்கு ஒரு தொகுதியை அதிகம் வென்று, 9 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த முறையும் இந்த மண்டலத்தில் கோட்டைவிட்டு உள்ளது. மேலும், 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது 11% வாக்கு வங்கியை வைத்திருந்த காங்கிரஸ், இப்போது வெறும் 4% பெற்றுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் வீழ்ச்சி
அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியும், இப்பகுதியில் கடந்த முறை மூன்று சீட்டுகளை வென்றிருந்தது. இப்போது மும்ப்ரா-கல்வா தொகுதியை மட்டுமே வெல்ல முடிந்தது. இரு தொகுதிகளை தேசியவாத காங்கிரஸ் கட்சி, இழந்துள்ளது.

சிறு கட்சிகள்
சிறிய கட்சிகளான பகுஜன் விகாஸ் அகாதி, மற்றும் பியாசன்ட்ஸ் அண்ட் ஒர்க்கர்ஸ் கட்சி ஆகியவையும் கலவையான வெற்றியை பெற்றுள்ளன. பகுஜன் விகாஸ் கட்சி மூன்று தொகுதிகளை விரார் பகுதியில் வென்றுள்ளது. தாக்கூர்கள் மக்களுடன் ஏற்படுத்திக் கொண்ட நெருக்கமான உறவு தான் இந்த வெற்றிக்கு காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications