பாஜக வாக்கு வங்கியைக் குறிவைத்து தலித் வேட்பாளரை நிறுத்தியுள்ளது - சிவசேனா செம தாக்கு!
வாக்கு வங்கியை குறிவைத்துத்தான் பாஜக, தலித் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது என சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக சாடியுள்ளார்.
மும்பை: பாஜகவின் குடியரசு வேட்பாளர் வாக்கு வங்கியை குறிவைத்து நிறுத்தப்பட்டவராக இருக்கக் கூடாது. ஒட்டுமொத்த மக்களின் நலன் சார்ந்தவராக இருக்க வேண்டும் என பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா கூறியுள்ளது.
வரும் ஜூலை மாதம் 17 ஆம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி தன் வேட்பாளரை பாஜக அறிவித்துவிட்டது. தர்போது பீகார் மாநில ஆளுநராக பதவி வகிக்கும் ராம்நாத் கோவிந்த்தை வேட்பாளர் என அறிவித்ததில் இருந்து பல கட்சிகள் ஆதரவும் சில கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.
ராம்நாத் கோவிந்த் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தலித். இவர் டெல்லி உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் 16 வருடங்கள் வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர். மொரார்ஜி தேசாயின் தனிச் செயலராக அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தவர். வாஜ்பாய் மற்றும் அத்வானியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். ராஜ்யசபா எம்.பியாக இரண்டுமுறை பதவி வகித்தவர்.
தலித் ஒருவரை வேட்பாளாரக நிறுத்தியதில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா கட்சியின் பதில் என்னவாக இருக்கும் என அரசியல் ஆர்வலர்களும் எதிர்த்கட்சிகளும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். ஆனால் சிவசேனா, பாஜகவுக்கு உவப்பான பதிலைத் தரவில்லை.
தலித் ஒருவரை வேட்பாளாரக பாஜக நிறுத்தியது குறித்து சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறும்போது, தலித் என்பதற்காகவே ஒருவரை நீங்கள் வேட்பாளாரக நிறுத்தியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. உங்கள் கவனம் வாக்கு வங்கியின் மீது மட்டும் உள்ளது. ஆனால் ஜனாதிபதி வேட்பாளர் அனைத்து மக்களின் நலன் சார்ந்தவராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.