பணக்கார மும்பை மாநகராட்சியை தக்க வைத்துக் கொண்டது சிவசேனா.. விஸ்வநாத் மகாதேஷ்வர் மேயராக தேர்வு
பொருளாதார தலைநகரமான மும்பை மாநகராட்சியை சிவசேனா தக்க வைத்துக் கொண்டது. விஸ்வநாத் மகாதேஷ்வர் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மும்பை: 227 வார்டுகளை கொண்ட மும்பை மாநகராட்சிக்கு கடந்த மாதம் 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் சிவசேனா 84 இடங்களையும், பாஜக 82 இடங்களையும் கைப்பற்றியன. காங்கிரஸ் 31 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 9 இடங்களிலும், மராட்டிய நவநிர்மாண் சேனா 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.
இந்தத் தேர்தலில் யாருக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால் மும்பை மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றப் போவது யார் என்ற கேள்வியும் எதிர்ப்பார்ப்பும் அதிகமானது. இருப்பதில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ள சிவசேனாவிற்கும், பாஜகவிற்கும் இடையே கடும் போட்டு உருவானது.
இந்நிலையில், சிவசேனா சார்பில் மேயர் வேட்பாளராக விஸ்வநாத் மகாதேஷ்வரும், துணை மேயர் வேட்பாளராக ஹேமாங்கி வர்லிக்கரும் அறிவிக்கப்பட்டு, பின்னர், இருவரும் வேட்பு மனுவையும் தாக்கல் செய்தனர். அதே போன்று காங்கிரஸ் கட்சி சார்பில் மேயர் பதவிக்கு வித்தல் லோஹரே, துணை மேயர் பதவிக்கு வினி டிசோசா ஆகியோர் போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.
இந்த சூழ்நிலையில் 82 வார்டுகளில் வென்றுள்ள பாஜக மேயர் தேர்தலில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தது. மேலும், மேயர் தேர்தலில் சிவசேனாவை ஆதரிப்போம் என்றும் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மும்பை மாநகராட்சி கூட்ட அரங்கத்தில் இன்று காலை மேயர் தேர்தல் நடைபெற்றது, இந்தத் தேர்தலில் சிவசேனா கட்சியை சேர்ந்த விஸ்வநாத் மகாதேஷ்வர் மேயராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் சிவசேனா மீண்டும் மும்பை மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.