மகாராஷ்டிரா சட்டசபையில் இன்று பாஜக அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போகும் சிவசேனா
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் பாஜக அரசு இன்று கொண்டு வரும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதற்கு எதிராக வாக்களிக்க சிவசேனா முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபையில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. 288 உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் பாஜகவுக்கு 121 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க அதற்கு கூடுதலாக 24 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இந்நிலையில் ஆதரவு தொடர்பாக சிவசேனாவுடன் பாஜக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

ஏற்கனவே சட்டசபையில் எதிர்கட்சி இருக்கையில் அமர்ந்துள்ள சிவசேனா தனது 63 எம்.எல்.ஏ.க்களும் இன்று பாஜக அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. இந்த தகவலை சிவசேனா மூத்த தலைவர் ராம்தாஸ் கதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் எதிர்கட்சியாக இருக்க முடிவு செய்துள்ளோம். நிலைமையை சரி செய்ய நாங்களும் நேற்று இரவு வரை ஒரு மாத காலமாக முயற்சி செய்தும் பாஜக மாறவில்லை. இந்நிலையில் அரசுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளோம். பாஜக மீது வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்றார்.
மாநிலத்தின் நலனை கருதாமல் சிவசேனா இந்த முடிவை எடுத்துள்ளது என்று மகாராஷ்டிரா மாநில நிதி அமைச்சர் சுதிர் முகன்திவார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications