ஒரு வேலைக்கே நாக்கு தள்ளுது! 7 வருஷத்தில் 141 கம்பெனி! ஒரே நேரத்தில் 10 வேலை! சிக்கிய கில்லாடி லேடி!
பெங்களூர்: உலக அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பொருளாதார சிக்கல்கள் காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் எப்போது தங்கள் வேலை பறிபோகும் என்ற அச்சத்தில் ஊழியர்கள் பணி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனால் ஏழு ஆண்டுகளில் 141 நிறுவனங்களில் ஒரு பெண் ஊழியர் பணியாற்றி இருக்கிறார். அதுவும் ஒரே நேரத்தில் 10 நிறுவனங்கள் வரை அவர் பணியாற்றி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
உலக அளவில் கொரோனாவுக்கு பிறகு பல பெரிய ஜாம்பவான் நிறுவனங்கள் கூட ஆட்டம் கண்டன. குறிப்பாக கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. அதே நேரத்தில் ஊழியர்களுக்கு சில சலுகைகளும் கிடைத்தது.
அந்த வகையில் ஒர்க் ப்ரம் ஹோம் என்பது கொரோனா காலத்தில் அதிக அளவில் பரவத் தொடங்கியது. நிறுவனங்களும் தங்களுக்கு குறிப்பிட்ட சில நன்மைகள் கிடைத்ததால் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதித்தன. ஒருபுறம் இதில் நன்மைகள் இருந்தாலும் பல சிக்கல்களும் இருக்கிறது.

ஃப்ரீ லான்சிங் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு பிற நிறுவனங்களிலும் வேலை பார்க்கத் தொடங்கினர் சில ஊழியர்கள். குறிப்பாக ஐடி துறையில் இந்த நடவடிக்கை அதிகமாக இருந்தது. இதற்குப் பிறகு பேக்ரவுண்ட் செக் என்பதும் வளர தொடங்கியது. இதற்காகவே பல நிறுவனங்கள் தோன்றின. அப்படி ஒரு நிறுவனம்தான் ஆன் கிரிட் (ongrid) நிறுவனம். தற்போது இந்த நிறுவனம் அதிகாரப்பூர்வ பணி பதிவு மற்றும் ஊழியரின் பின்னணி குறித்து சோதனை நடத்தியதில் ஒரு நபர் ஏழு ஆண்டுகளில் 141 நிறுவனங்களில் வேலை செய்தது தெரிய வந்திருக்கிறது.
மத்திய அரசின் இபிஎப்ஓ பதிவுகள் குறித்து ஆன் கிரிட் நிறுவனம் சோதனை செய்ததில் தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்த நிறுவனம் எம்பிளாய்மெண்ட் ஹிஸ்டரி செக் எனப்படும் EHC மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த விவகாரத்தை கண்டறிந்து இருக்கிறது. அந்த பெண் 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் வரையிலான காலகட்டத்தில் ஒரே நேரத்தில் பத்து நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறார். வேலையை மாற்றிய போதும் ஒவ்வொரு நாளும் இடைவெளி இல்லாமல் அவர் லாகின் செய்து இருப்பதாக பணிப் பதிவுகள் காட்டிருக்கிறது.
கடந்த கொரோனா காலத்தின் போது ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் வேலை செய்வது குறித்த விவகாரம் பெரும் விவாதத்தை எழுப்பியது. இன்போசிஸ், விப்ரோ, மைக்ரோசாப்ட் போன்ற பெரிய டெக் நிறுவனங்கள் ஒரே நேரத்தில் இரு வேலை பார்க்கக் கூடாது என எச்சரித்து இருந்தன. ஆனால் அந்த காலத்தில் தான் அந்த பெண் பல நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறார். குறிப்பாக 2020 ஆம் ஆண்டு மட்டும் அந்த பெண் 50 நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறார். அதுவும் மாறி மாறி.. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் என எல்லா வகையான நிறுவனங்களிலும் அவர் வேலை பார்த்திருக்கிறார்.
ஃப்ரீ லான்ஸ், ஹைபிரிட் வேலை, தூர வேலை ஆகியவை தற்போது பரிசீலிக்கப்படும் நிலையில் அந்தப் பெண் அதற்கு முன்னதாகவே இவற்றை எல்லாம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசி உள்ள ஆன்க்ரிட் நிறுவனத்தின் சிஇஓ பியூஷ் பேச்வானி," ஏற்கனவே அமலில் இருக்கும் பழைய பேக்ரவுண்ட் செக் முறைகள் போதுமானதாக இல்லை. தற்போது ஃப்ரீ லான்ஸ் என்ற பெயரில் ஊழியர்கள் பல நிறுவனங்களுக்கு வேலை செய்வதால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பாதிக்கப்படுவதோடு, அவற்றின் ரகசியங்களும் பொதுவெளிக்கு வருவது போல் ஆகிவிட்டது. இந்த சம்பவம் வேலை தரும் நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு மணி அடித்துள்ளது. நவீன வேலைவாய்ப்பு சூழலில் தெளிவான பேக்ரவுண்ட் செக் அவசியம்" என்கிறார்.












Click it and Unblock the Notifications