காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு! அமெரிக்காவில் தொடரும் துயரம்
நியூயார்க்: அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று மீண்டும் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. வர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த திடீர் தாக்குதலில் சுமார் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உலக அளவில் துப்பாக்கிகள் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. இந்நாட்டில் 100 பேரிடம் 120 துப்பாக்கிகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்கிற அச்சமும் மேலெழுந்திருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் 24ம் தேதி அமெரிக்காவின் உவால்டே பகுதியில் உள்ள பள்ளியில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூட்டில் சுமார் 21 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு முன்னர் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள்தான் அதிக அளவில் உயிரிழந்திருந்தனர். ஆனால் 21 மாணவர்கள் உயிரிழந்திருப்பது அந்நாட்டு மக்களின் மனசாட்சியை உலுக்கியது. தற்போது இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். வளாகத்தில் உள்ள திறந்தவெளியான மன்ரோ பூங்காவில் மாலை 5:13 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் ஈடுபட்டவர்களும் மாணவர்கள்தான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications