பெங்களூரில் பட்டப்பகலில் துப்பாக்கி சூடு.. காரில் சென்ற காங். பிரமுகர், டிரைவர் படுகாயம்
பெங்களூர்: பெங்களூரில் பட்டப்பகலில் காரில் சென்ற இருவர் மீது பைக்கில் வந்த நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் எலகங்கா பகுதியை சேர்ந்தவர் கடபகெரே ஸ்ரீநிவாஸ். பெங்களூர் நகர காவல்துறை, ரவுடி பட்டியலில் இவரது பெயர் உள்ளது. கொலை, மிரட்டல் என 13 கிரிமினல் வழக்குகள் இவர் மீது நிலுவையிலுள்ளது. பாஜகவை சேர்ந்த எலகங்கா தொகுதி எம்.எல்.ஏ விஸ்வநாத்துக்கு வலதுகரமாக விளங்கி வந்த ஸ்ரீநிவாஸ் சமீபத்தில், காங்கிரசில் இணைந்தார்.
இன்று மதியம் இவர் தனது காரில் எலகங்கா பகுதியிலுள்ள கோகிலு கிராஸ் ஏரியாவில் பயணித்துக்கொண்டிருந்தார். காரை டிரைவர் மூர்த்தி இயக்கிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் திடீரென வந்து வழி மறித்த இருவர், காரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
Bengaluru: Agricultural Produce Market Committee President shot by unknown assailants near Kogilu Junction; details awaited pic.twitter.com/eU28XwfCfR
— ANI (@ANI_news) February 3, 2017
இந்த தாக்குதலில் ஸ்ரீநிவாஸ் மற்றும் மூர்த்தி காயமடைந்தனர். டிராபிக் நெரிசல் மிக்க ஒரு பகுதியில் நடந்த இந்த தாக்குதல் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள் உஷாராவதை பார்த்த பைக்கில் வந்த நபர்கள் தப்பியோடிவிட்டனர்.தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்த இருவரையும் கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். சாலையில் சிதறிக் கிடந்த புல்லட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. முன் விரோதம் காரணமாக இக்கொலை முயற்சி நடைபெற்றுள்ளதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். நகர போலீஸ் கமிஷனர் பிரவீண் சூட் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பரிசீலனை நடத்தினர்.