தள்ளுபடி விற்பனையில் நோ எக்ஸ்ட்ரா வாட்! நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையம் அதிரடி!!
தள்ளுபடியில் விற்கப்படும் பொருட்கள் மீது வாட் உள்ளிட்ட எந்த வரிகளையும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கக் கூடாது என்று தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: தள்ளுபடியில் விற்கப்படும் பொருட்கள் மீது கூடுதல் வாட் வரி விதிக்கக் கூடாது என்று தேசிய நகர்வோர் குறை தீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
40 சதவீத தள்ளுபடி என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தைப் பார்த்த ஒருவர் ஜாக்கெட் ஒன்றை வாங்கி உள்ளார். எம்ஆர்பி விலையில் இருந்து 40 சதவீதம் தள்ளுபடி என்று நினைத்து வாங்கிய நிலையில், தள்ளுபடி செய்யப்பட்ட தொகையில் இருந்து வாட் வரி வாடிக்கையாளரிடம் இருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து, அவர் மாநில நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்தில் முறையிட்டுள்ளார். அவரிடம் இருந்து வாட் வரியாக வசூலித்த தொகை வெறும் 119.85 காசுகள்தான் என்றாலும் வாடிக்கையாளர் தனது உரிமைக்காக போராடினார். அந்தத் தொகையை திருப்பித் தர உத்தரவிடக் கோரி நுகர்வோர் நீதிமன்றத்தில் போராடினார்.
ஆனால், அங்கு அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்திற்கு கடந்த மாதம் சென்றது. இந்த புகார் மனுவை விசாரித்த ஆணையம், தள்ளுபடி செய்யப்பட்ட தொகையின் மீது வாட் வரி கூடுதலாக விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், 40 சதவீத தள்ளுபடியில் விற்கும் பொருட்கள் மீது வாட் மட்டுமல்லாமல் அனைத்து வரிகளும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
இனி, தள்ளுபடியில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களே வாட் வரியை கூடுதலாக கடைக்காரர்கள் வசூலித்திருக்கின்றார்களா என்பதை உஷாராக கவனியுங்கள்.