விடாமல் தொடரும் துயரம்.. புத்தம் புதிய ரூ.2000 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு.. வங்கிகள் திணறல்!
அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை : கடந்த சில வாரங்களாக ரூ.2000 புதிய நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வங்கிகள் பணப்பரிமாற்றம் செய்ய முடியாமல் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.
பிங்க் நிறத்தில் அச்சடித்து வெளியிடப்பட்ட ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கடந்த சில வாரங்களாகவே குறைவான புழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் வங்கிகள் மற்றும ஏடிஎம்களில் பண பற்றாக்குறை எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கூறும் வங்கிகள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. உயர் மதிப்புடைய நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு மத்திய வங்கி சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ. 500 நோட்டுகளாக பெற்று பணம் பரிவர்த்தனை நடந்து வருகிறது. ரூ.2 ஆயிரம் நோட்டுகள் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளவை மட்டுமே சுழற்சியில் விடப்படுவதாகவும் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தட்டுப்பாடா?
நாட்டில் அதிக ஏடிஎம் மையங்களைக் கொண்டுள்ள எஸ்பிஐ ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் தட்டுப்பாட்டால், ரூ. 500 நோட்டை பெற்று தங்களுடைய ஏடிஎம் மெஷின்களில் நிரப்பி வருவதாகக் கூறியுள்ளது. உயர் மதிப்புடைய ரூ.2 ஆயிரம் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் மத்திய வங்கி ரூ.500ஐ விநியோகித்து வருகிறது. இதனால் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்த போது ஏற்பட்ட அளவிற்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று வங்கிகள் கூறுகின்றன.
அவசரமாக அச்சடிக்கப்பட்ட நோட்டு
கடந்த நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் மதிப்பிழந்ததையடுத்து ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து அவசர நடவடிக்கையாக பணத் தட்டுப்பாட்டை நீக்க ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடப்பட்டு ஏடிஎம்களில் நிரப்பப்பட்டன.
பற்றாக்குறை
கடந்த மூன்று நான்கு நாட்களாகவே ரூ.500 நோட்டுகளும், ரூ.100 நோட்டுகளும் ஏடிஎம்களில் நிரப்பப்படுவதாக ஏடிஎம் ஆப்பரேட்டர்கள் கூறுகின்றனர். எனினும் மக்கள் பயன்பாட்டிற்காக அதிக அளவில் பணம் எடுக்கப்படுவதால் கொல்கத்தா, பாட்னா மற்றும் ஆந்திரா-தெலங்கானா உள்ளிட்ட இடங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
சில்லறைக்கு கஷ்டமில்லை
ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வைத்துக் கொண்டு சில்லறை கிடைக்காமல் அலைந்தனர் மக்கள். ஆனால் இப்போது அந்த பிங்க் நிற நோட்டிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தாலும், ரூ. 500 நோட்டு தாராளமாக கிடைக்கும் என்பதால் மக்களுக்கு சில்லறை மாற்றுவது எளிதான விஷயமே என்று கூறுகின்றனர் வங்கி அதிகாரிகள்.