ஆம் ஆத்மி பிரச்சாரத்தில் விண்ணை கிழித்த "மோடி கோஷம்".. கெஜ்ரிவால் கூறிய ஒற்றை வார்த்தை.. "மாஸ்"
காந்திநகர்: குஜராத் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சிக்காக பிரச்சாரம் செய்ய சென்ற அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலை பேச விடாமல் ஒரு பெரும் கூட்டம் "மோடி.." "மோடி.." என கோஷம் இட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பேசிய கெஜ்ரிவால் , "நீங்கள் யார் பெயரை வேண்டுமானாலும் கோஷமாக எழுப்புங்கள். அதுகுறித்து நான் கவலைப்பட மாட்டேன். உங்கள் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் கட்டித்தர போகிறவன் நான் தான்" என அவர் கூறினார்.
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு கடும் நெருக்கடியை ஆம் ஆத்மி கொடுத்து வருவதால், பாஜக தொண்டர்கள் அர்விந்த் கெஜ்ரிவால் மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மிரட்டும் ஆம் ஆத்மி..
குஜராத் சட்டமன்றத் தேர்தல் இன்னும் 10 நாட்களில் நடைபெறப் போகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அங்கு இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத்தை பொறுத்தவரை, முதலில் பாஜக vs காங்கிரஸ் என இருந்த நிலைமை தற்போது பாஜக vs ஆம் ஆத்மி என மாறிவிட்டது. குஜராத் தேர்தல் களத்திற்கு புதிதாக வந்த ஆம் ஆத்மி என்ன செய்துவிடப் போகிறது என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால், தமது வழக்கமான தேர்தல் வியூகத்தை மாற்றி, குஜராத் மண்ணுக்கு ஏற்ற அரசியல் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது ஆம் ஆத்மி. இதனால் குஜராத் மக்கள் மத்தியில் ஆம் ஆத்மிக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

மோடி கோஷம்..
இந்நிலையில், குஜராத்தின் ஹலோல் நகரத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அர்விந்த் கெஜ்ரிவால் நேற்று மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கெஜ்ரிவால் பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே கூட்டத்தில் இருந்த பலர், "மோடி.." "மோடி.." என கோஷம் இட்டனர். கேஜ்ரிவாலை பேசவிடாமல் அவர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

"எவ்வளவு முடியுமோ கத்துங்கள், ஆனால்"..
அப்போது அந்த கோஷத்துக்கு மத்தியில் கெஜ்ரிவால் உரக்கப் பேசினார். அவர் கூறுகையில், "நண்பர்கள் சிலர் மோடி.. மோடி.. என கோஷமிடுகிறீர்கள். நான் அவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் யாரை ஆதரித்து வேண்டுமானாலும் கோஷம் போடுங்கள். ஆனால் கெஜ்ரிவால் தான் உங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வியை தரும் பள்ளிக்கூடங்களை கட்டித்தர போகிறான். உங்களால் எவ்வளவு கத்த முடியுமோ அவ்வளவு சத்தமாக கோஷமிடுங்கள். ஆனால், இந்த கெஜ்ரிவால் தான் உங்களுக்கு நாளை இலவச மின்சாரத்தை கொடுக்க போகிறான்.

"குஜராத்தில் காலடி வைக்க மாட்டேன்"..
குஜராத்தில் இதுவரை எந்தக் கட்சியாவது பள்ளிக்கூடங்களை அமைப்பது குறித்தும், மருத்துவமனை கட்டுவது குறித்தும், வேலைவாய்ப்பு வழங்குவது குறித்தும் பேசியிருக்கிறதா? பேசியிருக்காது. ஆனால், ஆம் ஆத்மி தான் உங்கள் குழந்தைகளின் கல்வி குறித்தும், அவர்களின் முன்னேற்றம் குறித்தும் பேசும். 27 ஆண்டுகளாக உங்களை ஆள பாஜகவுக்கு வாய்ப்பு அளித்தீர்களே.. அவர்கள் உங்கள் குழந்தைகளின் கல்விக்கு ஏதாவது செய்திருக்கிறார்களா? எங்களுக்கு 5 ஆண்டுகள் மட்டும் தாருங்கள். நாங்கள் குஜராத்தை முன்னேற்றிக் காட்டுகிறோம். அப்படி இல்லையென்றால், அதன் பிறகு குஜராத்தில் நான் காலடி எடுத்து வைக்க மாட்டேன். எனக்கு யார் மீதும் வருத்தமோ, கோபமோ இல்லை. உண்மை ஒரு நாள் உங்களுக்கு தெரியவரும். அப்போது நீங்கள் என்னை தேடி வருவீர்கள்" இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.












Click it and Unblock the Notifications