கர்நாடகாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம்.. சித்தராமையா அவசர அழைப்பு
பெங்களூரு: தமிழகத்திற்கு கூடுதல் நீரை காவிரியில் இருந்து திறந்துவிடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கர்நாடகத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்திற்கு இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களில் வன்முறை சம்பவங்கள் வெடிக்க வாய்ப்புள்ளது. சில இடங்களில் கன்னட அமைப்பினர் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் சித்தராமையா பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது பற்றி ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது. மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்டத்துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications