சித்தராமையாவின் 'வலது கை' சொல்லியாச்சு.. கை கழுவ தயாராகிறது கர்நாடகா!
பெங்களூர்: ஜெயலலிதா வழக்கில் அப்பீல் செய்யாமல் பின்வாங்குவதற்கு காங்கிரஸ் கட்சி முழு வீச்சில் தயாராகிவிட்டதாக கர்நாடகாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விடுதலை அளித்து கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கு அப்பீல் செய்ய தகுதியான வழக்கு என்று மாநில அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமாரும், சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆச்சாரியாவும் அரசுக்கு சிபாரிசு செய்தனர்.
ஆனால், இந்த விவகாரம், சட்டப் பிரச்சினையில் இருந்து மாறி அரசியல் விவகாரமாகிவிட்டதாகவே கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

ஒதுங்க முயற்சி
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய முதல் தகுதி படைத்த பிரதிவாதி, கர்நாடக அரசுதான். ஆனால் வழக்கில் இருந்து தப்பிக்கவே கர்நாடக அரசு முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆச்சாரியா வெளிப்படையாக அளித்த பேட்டிகள், தங்களது முடிவுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக உணர்ந்த கர்நாடக அரசு, தனது சகாக்கள் ஒவ்வொருவராக பேட்டியளிக்க வைத்து, ஆச்சாரியாவுக்கு மறைமுகமாக கவுண்டர் கொடுத்து வருகிறது.

அமைச்சரே எதிர்ப்பு
முதலில், மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், இந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். கர்நாடகம் அப்பீல் செய்ய கூடாது என்று பேட்டி கொடுத்தார். இரண்டாவதாக, காங்கிரஸ் சட்டப் பிரிவு, தலைவர் தனஞ்சய் அளித்த பேட்டியில், கர்நாடகா ஒரு பார்ட்டியே கிடையாது எனவே, அப்பீல் செய்ய கூடாது என்று முதல்வர் சித்தராமையாவுக்கு சிபாரிசு செய்திருப்பதாக தெரிவித்தார்.

உறவு பாதிக்குமாம்
முன்னாள் அமைச்சரும், கர்நாடக காங்கிரஸ் பிரமுகருமான ஆர்.வி.ராஜசேகரனோ, அப்பீல் செய்தால், தமிழகம்-கர்நாடகா நடுவே உறவு பாதிக்கப்படும் என்பதால், அப்பீல் வேண்டாம் என்று கூறினார். தற்போது கர்நாடக திட்ட கமிஷன் தலைவர் சி.எம்.இப்ராஹிமும், அப்பீல் வேண்டாம் என்று கூறியுள்ளார். இந்த இப்ராஹிம், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் வலதுகரம் போன்றவர்.

யார் இந்த இப்ராஹிம்?
தேவகவுடாவால் புறக்கணிக்கப்பட்டபோது, கோபத்தில் சித்தராமையா மதசார்பற்ற ஜனதாதளத்தை விட்டு வெளியேறினார். அப்போது சித்தராமையாவுடன், வெளியேறியவர்தான் இந்த இப்ராஹிம். இருவரது நட்பும் காங்கிரசிலும் தொடரவே செய்தது.

சித்துவின் செல்லப்பிள்ளை
ஷிமோகா மாவட்டம் பத்ராவதி சட்டசபை தொகுதியில், போட்டியிட இப்ராஹிமுக்கு பெரும் லாபி செய்து சீட் பெற்றுக் கொடுத்தார் சித்தராமையா. ஆனால், இப்ராஹிம் தோல்வியடைந்தார். இருப்பினும், அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து கொண்ட மாநில திட்டக் குழு தலைவராக்கி அழகு பார்த்துள்ளார் சித்தராமையா. இப்ராஹிமின் இந்த பேட்டி, சித்தராமையாவின் மைண்ட் வாய்ஸ்தான் என்கின்றனர் கர்நாடக அரசியல் பார்வையாளர்கள்.

அமைச்சரவையே தள்ளி வைப்பு
இந்நிலையில்தான், இன்று நடைபெறவிருந்த அமைச்சரவை கூட்டமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், அமைச்சரவை கூட்டத்தில், அப்பீல் குறித்து விவாதித்து அவருக்கு நெருக்கடி தர வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.
அப்புறமென்ன, சித்தராமையாவின் வலது கரமே சொல்லியாச்சி, ஜெயலலிதா அப்பீல் விஷயத்தை கை கழுவிவிட வேண்டியதுதானே.












Click it and Unblock the Notifications