கன்னடர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள்... ஜெயலலிதாவுக்கு சித்தராமையா அவசர கடிதம்!
பெங்களூரு: தமிழகத்தில் கர்நாடக மாநிலத்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரி அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படிதான் தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டது. ஆனால் இதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பி போராட்டம் வெடித்தது. அப்போது தமிழக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழ் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உட்லாண்ட் ஓட்டல் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு மற்றும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஓட்டலின் வரவேற்பறையில் இருந்த பொருட்கள் மற்றும் கண்ணாடிகளையும் மர்ம நபர்கள் அடித்து உடைத்துள்ளனர்.
மேலும் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் இங்கு தாக்குதல் தொடரும் என்ற எச்சரிக்கை கடிதத்தையும் மர்ம நபர்கள் போட்டுச் சென்றுள்ளனர். கர்நாடகாவில் தமிழக இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ராமேஸ்வரத்தில் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 4 பேரை ராமேஸ்வரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே கர்நாடக பதிவு எண் கொண்ட 2 வாகனங்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். கர்நாடகாவில் இருந்த தமிழகத்திற்கு சுற்றுலா வந்த ஒரு குடும்பத்தினர் வைத்தீஸ்வரன் கோவில் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றனர்.
இதனிடையே கன்னடர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமைய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications