தேனி காங். கூட்டத்தில் குரும்பர் இன ஒற்றுமை குறித்துப் பேசிய சித்தராமையா
தேனி: தேனியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் அவர் குறும்பர் இன மக்களின் ஒற்றுமை, குறும்பர் இனத்தவர் சிதறிக் கிடக்கிறார்கள், அவர்களை பெரியார் போன்ற ஒருவர் இருந்திருந்தால் ஒற்றுமையாக்கியிருப்பார் என்று ஜாதி பற்றிப் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
தேனி எம்.பி. தொகுதி காங்கிரஸ் சார்பில் சித்தராமையாவுக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமை தாங்கினார். தேனி தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜே.எம்.ஆரூண் வரவேற்றார்.
இதில் காங்கிரஸ் கட்சி குறித்தோ, காங்கிரஸ் கட்சியின் சாதனைகள் குறித்தோ, வளர்ச்சி குறித்தோ முக்கியமாக பேசவில்லை சித்தராமையா. ஆனால் தமிழகத்தில் உள்ள குறும்பர் சமுதாய மக்கள் குறித்தே அதிகம் பேசினார்.

அவரது பேச்சைப் பாருங்கள்...
தமிழ்நாட்டில் குரும்பர் இன மக்கள் சுமார் 25 லட்சத்தில் இருந்து 35 லட்சம் பேர் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வெவ்வேறு மாவட்டத்தில் வசிக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்கள் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று வெவ்வேறு பிரிவுகளாக உள்ளனர்.
தமிழ்நாட்டில் குரும்பர் இனத்தினர் ஒரே சமூகமாக இல்லை. இவர்கள் அனைவரும் ஒரே இனமாக இணைய வேண்டும். அதற்கு தமிழகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இதைத்தொடர்ந்து மாநில அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மாநில அரசு பரிந்துரை செய்தால் குரும்பர் இன மக்களை ஒரே பிரிவாக பட்டியலிட மத்திய அரசு தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் குரும்பர் இன மக்கள் 35 லட்சம் பேர் இருந்தும் குரும்பர் இனத்தில் இருந்து ஒரு எம்.பி.யோ, ஒரு எம்.எல்.ஏ.வோ இல்லை.
தமிழகத்தில் தந்தை பெரியார் போன்று ஒருவர் இருந்தால் இந்த இன மக்களை நன்கு வழி நடத்தி, நல்ல உயர் பதவிகளிலும், கட்சிகளில் நல்ல பதவிகளையும் ஏற்படுத்தி கொடுத்து இருப்பார். இங்குள்ள குரும்பர் இன மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதுபோன்ற கீழ்தட்டு மக்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு வருவது காங்கிரஸ் அரசால் மட்டுமே முடியும். கீழ்தட்டு மக்கள் எல்லாம் முதல்வர் மற்றும் பல உயர் பதவிகளுக்கு வருவது என்றால் அது காங்கிரசால் மட்டுமே முடியும். இதற்கு நானே சாட்சி என்றார் அவர்.
ஒரு வேளை லோக்சபா தேர்தல் வருவதால் சித்தராமையாவை வைத்து குறும்பர் சமுதாய மக்களின் வாக்குகளைக் கவரும் வகையில் இந்தக் கூட்டத்தைப் போட்டதோ காங்கிரஸ்...
எல்லாத்திலும் பாலிட்டிக்ஸ்னா எப்படிய்யா..!












Click it and Unblock the Notifications