சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கும் நீட் கட்டாயம்... மத்திய அரசின் அடுத்த அதிரடி!
சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: ஆயுஷ் துறையின் கீழ் வரும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகளுக்கும் 2018ம் முதல் நீட் தேர்வை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவம் என்று சொல்லப்படும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு அதற்கான தேர்வுகளும் மே 7ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வு எழுத மாணவர்களை அனுமதித்த முறை, பிராந்திய மொழிக் கேள்வித்தாளில் வேறுபாடு என்று பல குளறுபடிகளில் சிக்கியுள்ளது நடந்து முடிந்துள்ள நீட் தேர்வு.
நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த எதிர்ப் தெரிவித்து தமிழகம், குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது ,இந்த வழக்குகள் மீதான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய ஆயுஷ் அமைப்பின் கீழ் வரும் அனைத்து மருத்துவ படிப்புகளுக்கும் நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் யஸோ நாயக் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். இதன்படி சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா உள்ளிட்ட இயற்கை முறையிலான அனைத்து மருத்துவ படிப்புகளுக்கும் 2018 முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும் என்று தெரிகிறது.