காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மாநில உரிமை பறிபோகும்... சித்தராமையா போடும் முட்டுக்கட்டை!
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மாநில உரிமைகள் பறிபோகும் என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Recommended Video
மைசூரு : காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மாநில உரிமைகள் பறிபோகும், எனவே காவிரி மேற்பார்வைக் குழுவே போதுமானது என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விதித்த காலக்கெடு இன்றுடன் முடிகிறது. ஆனால் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்கிறதா என்ற முடிவை இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை.
இந்நிலையில் மாலை 5 மணி வரை காத்திருப்போம் என்று தமிழக அரசு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மைசூரில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா கூறும் போது : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. காவிரி விவகாரத்தில் மேற்பார்வைக் குழுவே போதுமானது.
மேற்பார்வை குழு அமைத்தால் மாநில அரசு அதனை கண்காணிக்கலாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் முழு பொறுப்பும் மத்திய அரசு வசம் சென்றுவிடும் இதனால் மாநில உரிமை பறிபோகும் என்றும் சித்தராமையா கூறியுள்ளார்.
காவிரிநீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்று உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பில் தெளிவாக தெரிவித்துள்ளது. கர்நாடகா கட்டுப்பாட்டில் உள்ள காவிரி நீர் பங்கீட்டு விஷயத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து எந்த மாநிலத்திற்கும் பாதகம் இல்லாமல் தீர்ப்புப்படி காவிரி நீரை பகிர்ந்தளிக்க வேண்டியே காவிரி மேலாண்மை வாரியம் என்ற ஒன்றை அமைக்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் கூறியது.
ஆக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் காவிரி நீரை 4 மாநிலங்களும் பிரித்துக் கொள்வது கட்டாயமாகிவிடும் என்பதாலேயே கர்நாடகா தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்பது இப்போது நிரூபனமாகியுள்ளது.