சிக்கிம் மேகவெடிப்பு: அடித்து செல்லப்பட்டதா ராணுவ ஆயுத கிடங்கு? மாநில அரசு எச்சரிக்கையால் பரபரப்பு!
காங்டாக்: சிக்கிம் மேகவெடிப்பு பெருவெள்ளத்தில் ராணுவத்தின் ஆயுத கிடங்கு அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சிக்கிம் டீஸ்டா நதிகரையில் வெடிபொருட்கள் ஏதேனும் ஒதுங்கினால் பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மாநில அரசு விடுத்துள்ள வேண்டுகோளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் லோனாக் ஏரியில் மேகவெடிப்பால் பெருமழை கொட்டி அதன் கரை உடைந்து டீஸ்டா நதியில் வெள்ளம் ஏற்பட்டது. சுனாமிப் பேரலை போல டீஸ்டாவில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இந்த வெள்ளத்தால் சிக்கிம் மாநிலத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் 14 பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன.

மேலும் பெருவெள்ளத்தில் சிக்கிய 6 ராணுவ வீரர்கள் உட்பட 19 பேர் இதுவரை பலியாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 22 ராணுவ வீரர்கள் உட்பட 103 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. இவர்களைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிக்கிமில் அனைத்து பள்ளி, கல்லூரி என கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் சிக்கிம் மாநிலத்துக்கு சுற்றுலா பயணிகள் தற்போதைக்கு வரவேண்டாம்; பயணத் திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனிடையே டீஸ்டா நதிகரையின் ஓரத்தில் ஆபத்தான வெடிபொருட்கள் கரை ஒதுங்கினால் பொதுமக்கள் உடனடியாக அரசு நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்; அதை கையில் எடுக்கக் கூடாது எனவும் சிக்கிம் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் சிக்கிமில் ராணுவத்தின் ஆயுத கிடங்கும் டீஸ்டா நதி பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சிக்கிம் மாநில அரசு 03592-202892 ; 03592-221152; 8001763383 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் சிக்கிமில் சிக்கி தவிக்கும் 3,000 சுற்றுலா பயணிகளை சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்புவதிலும் அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மேலும் டீஸ்டா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த நீர்மின் உற்பத்தி நிலையமும் அப்படியே ஒட்டுமொத்தமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. சிக்கிமில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications