இந்தியாவுடன் போருக்கு ரெடியாகும் பாகிஸ்தான்? சிம்லா ஒப்பந்தம் ரத்தின் பின்னணி இதுதானா?
டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையே 1972-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிம்லா ஒப்பந்தம்தான் இருநாடுகளிடையேயான போர் பதற்றத்தைத் தணிக்கும் உடன்படிக்கையாக கருதப்படுகிறது. தற்போது சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தான்தோன்றித்தனமாக பாகிஸ்தான் அறிவித்துள்ளதன் மூலம், இந்தியாவுடனான போருக்கு அந்த நாடு தயாராகிவிட்டது என்கின்றனர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.
1971-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் எனப்படும் இன்றைய வங்கதேச விடுதலைக்காக பாகிஸ்தான்-இந்தியா இடையே யுத்தம் நடைபெற்றது. இந்தப் போரில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் வங்கதேசம் என்கிற தனி சுதந்திர நாடு உருவானது.

இதனையடுத்து 1972-ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது. 1972-ம் ஆண்டு கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும் பாகிஸ்தான் அதிபர் ஜூபிகர் அலி பூட்டோவும் கையெழுத்திட்டிருந்தனர். சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படை சாராம்சமே, இருநாடுகளிடையே போர் பதற்றத்தைத் தணிப்பதாகும். இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வலியுறுத்துகிறது இந்த சிம்லா ஒப்பந்தம். இரு நாடுகளிடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தன்னிசையாக எந்த ஒரு நாடும் மாற்ற முடியாது என்கிறது சிம்லா ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின் கீழ்தான், இந்தியாவிடம் இருந்த 90,000 பாகிஸ்தான் போர் கைதிகள் அப்போது ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் சிம்லா ஒப்பந்தம்தான், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை இருநாடுகளிடையேயான எல்லையாகவும் நிர்ணயித்தது. அத்துடன் காஷ்மீர் பிரச்சனையில் ஐநா சபை உள்ளிட்ட 3-வது நாடுகளின் தலையீட்டையும் இந்த சிம்லா ஒப்பந்தம் நிராகரிக்கிறது.
தற்போது சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் தன்னிச்சையாக அறிவித்திருப்பதன் மூலம், இந்தியாவுடன் யுத்தத்துக்கு தயார் என்கிற பிரகடனத்தையே பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது என்கின்றனர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications