கறுப்பு பணம் மீட்புக்கான சிறப்பு புலனாய்வு குழுவின் முதல் கூட்டம் நாளை கூடுகிறது!
டெல்லி: கறுப்புப் பணத்தை மீட்பதற்கு மத்திய அரசு அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கறுப்பு பண மீட்பு தொடர்பான விசாரணையை கண்காணிக்க சிறப்பு புலனாய்வு குழுவை 3 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால், முந்தைய மன்மோகன்சிங் அரசு 3 வாரங்களுக்குள் அக்குழுவை அமைக்கவில்லை. இதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழு அமைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு வார காலத்துக்கு உச்சநீதிமன்றம் நீட்டித்தது.
அந்த அவகாசமும் முடிவடையும் நிலையில் நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு அமைத்தது.
இதைத் தொடர்ந்து கறுப்பு பணத்தை மீட்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவின் முதல் உயர்நிலைக் கூட்டம் நாளை கூடுகிறது. இதில் கொள்கை விவகாரங்கள் மற்றும் நடைபெற்று வரும் விசாரணை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications