லோக்சபா தேர்தலில் காங்.உடன் கூட்டணி வைக்க சிபிஎம் எதிர்ப்பு-பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி ராஜினாமா?
சிபிஎம் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சீதாராம் யெச்சூரி ராஜினாமா செய்ய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொல்கத்தா: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழுவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்சி பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்ய சீதாராம் யெச்சூரில் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்தியில் ஆளும் பாஜகவின் யசேத்திகார நடவடிக்கைகளுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றது.
பிரகாஷ் காரத் போட்டி தீர்மானம்
இக்கூட்டத்தில் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இதற்கு எதிராக பிரகாஷ் காரத் தலைமையிலான அணியினர் ஒரு தீர்மானம் கொண்டு வந்தனர்.
தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு
இந்த தீர்மானங்கள் மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் சீதாராம் யெச்சூரி அணியின் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
யெச்சூரி அணி அதிருப்தி
மேலும் 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் எந்த கூட்டணியும் உடன்பாடும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சீதாராம் யெச்சூரி ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
மேலிடம் நிராகரிப்பு?
இந்நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக மார்க்சிஸ்ட் கட்சி மேலிடத்திடம் சீதாராம் யெச்சூரி விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டில் லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பான இறுதித் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதனால் சீதாராம் யெச்சூரியின் ராஜினாமாவை மார்க்சிஸ்ட் கட்சி மேலிடம் நிராகரிக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.